சொந்த ஊரில் தீபாவளியை கொண்டாடும் எடப்பாடி பழனிசாமி

470 0

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த ஊரான சிலுவம்பாளையத்திற்கு சென்று குடும்பத்துடன் தீபாவளி பண்டிகையை கொண்டாட உள்ளார்.முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு கோவை வந்தார். பின்னர் அங்கிருந்து அவர் கார் மூலம் புறப்பட்டு தனது சொந்த ஊரான எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையம் சென்றார்.

அங்கு எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இதையடுத்து அவர் சிலுவம்பாளையத்தில் இரவு தங்கினார்.

இன்று காலை சேலத்தில் நடந்த முன்னாள் எம்.பி. பன்னீர்செல்வம் இல்ல திருமண நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றதையொட்டியும், டாக்டர் பட்டம் பெற்ற பிறகு முதல் முறையாக சேலம் வந்த எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்தனர்.

தொடர்ந்து 28-ந்தேதி வரை 4 நாட்கள் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் தங்கி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். நாளை மறுநாள் (27-ந் தேதி) தனது சொந்த ஊரான சிலுவம்பாளையத்திற்கு சென்று குடும்பத்துடன் தீபாவளி பண்டிகையை எடப்பாடி பழனிசாமி கொண்டாட உள்ளார்.

28-ந்தேதி மாலை அவர் கார் மூலம் கோவை சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.