ஜனாதிபதித் தேர்தலில் எம்முன்னே இரண்டு தெரிவுகளே உள்ளன. இந்நிலையில் கோத்தாபயவுடன் ஒப்பிடுகையில், சஜித் மேன்மையானவராக காணப்படுகின்றார். அத்துடன் மலையக மக்கள் ரணசிங்க பிரேமதாஸவுக்கு நன்றிக்கடன்பட்டவர்கள் என்ற அடிப்படையில் பிரதியுபகாரம் செய்வதற்கும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதி மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாரம்பரம் வழங்கிய செவ்வியின்போது இவ்வாறு தெரிவித்தார்.
அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,
கேள்வி:- ராஜபக்ஷ அரசாங்கத்துடன் நீங்கள் இணைந்து பணியாற்றியிருக்கின்ற நிலையில் தமக்கான ஆதரவை அளிக்குமாறு இம்முறை உங்களிடத்தில் கோரவில்லையா?
பதில்:- உத்தியோகபூர்வமாக எவ்விதமான அழைப்புக்களையும் அவர்கள் விடுக்கவில்லை. தொலைபேசி வாயிலாக அணுகினார்கள். இருப்பினும், கடந்த நான்கரை ஆண்டுகளாக ஐ.தே.மு.யில் அங்கம் வகித்து வருவதோடு மலையக மக்களின் உரிமைகளை பெற்றுக்கொடுப்பதற்கான செயற்றிட்டங்களையும் ஆரம்பித்துள்ளோம். உதாரணமாக, நில உரிமையை பெற்றுக்கொடுக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டு இந்திய வீட்டுத்திட்ட உதவியுடன் 15ஆயிரம் பயனாளிகளுக்கு வீடுகளை வழங்கியுள்ளோம். இவ்வாறு மிக முக்கிய விடயங்களை ஐ.தே.முன்னணி அரசாங்கத்துடன் இணைந்து முன்னெடுத்துக் கொண்டிருக்கையில் மாற்றுத்தரப்பினருக்கு ஆதரவளிப்பது பற்றி சிந்திக்கவே முடியாது. ஆகவே நாம் அவ்வாறான முயற்சிகளை முன்னெடுத்திருக்கவில்லை.
கேள்வி:- ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதென தமிழ் முற்போக்கு கூட்டணி ஏகமனதான தீர்மானத்தினை எடுப்பதற்கான அடிப்படை காரணம் என்ன?
பதில்:- 1948ஆம் ஆண்டுக்கு பின்னர் பிரஜாவுரிமை பறிக்கப்பட்டு நாம் அநாதைகளாக்கப்பட்டபோது, 1988இல் சஜித் பிரேமதாஸவின் தந்தையாரான ரணசிங்க பிரேமதாஸவே சத்தியக்கடதாசி மூலமாக மீண்டும் வாக்குரிமையை பெற்றுக்கொடுத்தார். ஆகவே ரணசிங்க பிரேமதாஸவுக்கு நாம் நன்றிக்கடன் பட்டவர்களாக இருக்கின்றோம். அந்த வகையில் அவருடைய மகனுக்கு பிரதியுபகாரம் செய்வது கடமையாகின்றது.
கோத்தாபய பாதுகாப்பு செயலாளராக இருந்தபோதான நிலைமைகளை நான் கூறி மக்கள் அறிந்துகொள்ள வேண்டியதில்லை. ஆகவே கோத்தாவுடன் ஒப்பிடுகையில் சஜித் மேன்மையானவராக இருக்கின்றார்.
கேள்வி:- சஜித் பிரேமதாஸவிடத்தில் மலையக மக்கள் சார்ந்து தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளீர்க்கவல்ல நிபந்தனைகளை விதித்திருக்கின்றீர்களா?
பதில்:- நிபந்தனைகள் என்பதை விடவும், எமது மக்கள் சார்ந்த கோரிக்கைகளையே முன்வைத்திருக்கின்றோம் என்றே கூற வேண்டும். எமது மக்கள் வாழ்வாதார ரீதியான பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றார்கள். அவற்றுக்கான தீர்வினை பெற்றுக்கொடுப்பதே எமது இலக்காக இருக்கின்றது.
ஆகவே எமது மக்கள் சார்ந்து பத்து அம்ச கோரிக்கைகள் எம்மால் முன்வைக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் நிச்சயமாக உள்ளீர்க்கப்படவுள்ளன. குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் பல்கலைக்கழகம் அமைக்கப்படுதல், தேசிய கொள்கைகளின் கீழ் காணிகளை வழங்கல் உள்ளிட்ட முக்கிய பத்து விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
கேள்வி:- நிபந்தனைகளுக்கு அடிபணியப் போவதில்லையென்றும் பௌத்த சிங்கள சித்தாந்தத்தினுள் நின்றும் கருத்துக்களை வெளியிடும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் மீது எவ்வளவு தூரம் நம்பிக்கை கொள்ள முடியும்?
பதில்:- சஜித் ஜனாதிபதியானால் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வளிப்பார் என்று நாம் கூறவில்லை. ஆனால் அவருடைய தலைமைத்துவத்தின் கீழ் மக்கள் இருப்பார்கள் ஜனநாயக வெளியில் என்பது உறுதியான விடயமாகின்றது. அவருடைய தந்தைபோன்று சிறுபான்மை மக்கள் மீது அக்கறையும் அன்பும் கொண்டிருப்பார் என்ற அதீத நம்பிக்கை எமக்குள்ளது. இவ்வாறான பல விடயங்களை ஆராய்ந்து கொண்டே எமது கூட்டணி ஏகமனதான தீர்மானத்திற்கு வந்துள்ளது.
கேள்வி:- பழம்பெரும் மலையகக் கட்சியான இ.தொ.கா கோத்தாபயவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளமையானது உங்களுக்கு சவாலாக இருக்குமென்று கருதுகின்றீர்களா?
பதில்:- 2004ஆம் ஆண்டு நான் அரசியலுக்கு வந்திருந்தேன். அதன் பின்னர் பல பிரச்சினைகளை சந்தித்திருக்கின்றேன். இ.தொ.காவிற்கு எதிராக புறப்பட்ட அனைத்து மலையக பிரதிநிதிகளும் குறுகிய காலத்திலேயே அவர்களின் காலடியில் சரணடைந்துள்ளார்கள். தற்போது வரையில் நான் அவ்வாறான நிலைமைக்கு தள்ளப்படவில்லை. எனது பிரவேசமும் அதன் பின்னர் உருவான கூட்டணியின் காரணத்தினாலேயே இ.தொ.கா அரசியல் ரீதியாக வீழ்ச்சியடைய ஆரம்பித்தது.
மக்களும் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்று சுயாதீனமாக சிந்தித்து செயற்பட ஆரம்பித்தார்கள். எமது அரசியல் பிரவேசம் மலையக மக்களுக்கு நம்பிக்கையையும் சுதந்திரத்தினையும் அளித்துள்ளது. கடந்த தேர்தலிலும் இ.தொ.கா மஹிந்த ராஜபக் ஷவுக்கு ஆதரவளித்தபோதும் மக்கள் ஆணை வழங்கவில்லை. ஆகவே இ.தொ.காவை நாம் எமக்கு சவாலாக கருதவில்லை. மக்களும் அவ்வாறு நேர்மறையாக சிந்திக்க மாட்டார்கள். பெரும்பான்மையான ஆதரவினை சஜித்தே பெறுவார்.
கேள்வி:- ஐ.தே.க தலைமையிலான புதிய கூட்டணியில் இ.தொ.கா இணைவதற்கு முயற்சிகளை எடுத்தபோது அதற்கு தடையாக உங்களது கூட்டணி செயற்பட்டதாக கூறப்படுகின்றதே?
பதில்:- அவ்வாறில்லை. ஜனாதிபதித் தேர்தலொன்றே நடைபெறுகின்றது. பாராளுமன்றத் தேர்தல் ஒன்றல்ல. இ.தொ.காவானது, ஐ.தே.கவுடன் பேச்சுக்களை நடத்தியது. ஆனால் அவர்களின் நலன்களின் அடிப்படையிலே அது முன்னெடுக்கப்பட்டதால் வெற்றி பெற்றிருக்கவில்லை. இ.தொ.கா கூட்டணியில் இணைவதை நாம் எதிர்க்கவில்லை. அவ்வாறு இணைவதால் எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றே கூறினோம். ஆனால் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் நாம் நேர்மையான அரசியலை செய்கின்றோம் என்ற புரிதலை கொண்டிருக்கின்றார்கள்.
கேள்வி:- பிரதமர் ரணிலுக்கு ஜனாதிபதித் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்காமையை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில் :- எமது முன்னணி நபர்கள் சார்ந்து முடிவுகளை எடுக்கவில்லை. என்னுடைய தனிப்பட்ட நிலைப்பாட்டின் படி, பிரதமர் ரணில் சிறுபான்மை இனங்களை அரவணைக்கும் சிறந்ததொரு தலைவராக காணப்படுகின்றார். ஆனால் நாட்டில் இனவாதம் வேரூன்றிக் காணப்படுகின்றது. சாதாரண பெரும்பான்மை மக்களிடத்தில் விதைக்கப்பட்டுள்ளது. இதனால் அவரால் பெரும்பான்மை மக்களின் மனதை வெல்ல முடியாத நிலைமை இருக்கின்றது. அதனையிட்டு நான் கவலையடைகின்றேன். ஜனாதிபதியாக வருவதென்றால் அனைத்து சமூகத்தினதும் அங்கீகாரம் தேவையாக இருக்கின்றதல்லவா? ஆகவே தான் சஜித் பிரேமதாஸ முன்மொழியப்பட்டுள்ளார்.
கேள்வி:- கூட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படாத நிலைமை நீடிக்கையில் தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சினைக்கு எப்போது தீர்வு கிட்டும்?
பதில்:- கூட்டு ஒப்பந்தமானது, தொழிற்சங்கங்களுக்கும், தனியார் கம்பனிகளுக்கும் இடையில் நடைபெறுகின்றதொரு விடயமாகும். தொழிலாளர்கள் கோரும் சம்பளத்தினை வழங்க முடியாதென தனியார் கம்பனிகள் கூறுகின்றன. அரசாங்கமானது தனியார் கம்பனிகளுக்கு நிதியை வழங்க முடியாது. அவ்வாறு வழங்குவதில் சட்ட சிக்கல்கள் காணப்படுகின்றன. இதனால் தான் 50 ரூபாவினை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்தும் அதனை செயற்பாட்டு ரீதியாக முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினையை தற்போது அரசியலாக்கி விட்டார்கள்.
50 ரூபா பற்றி பேசுகின்றார்கள். ஆனால் ஆயிரம் ரூபா சம்பளம் சம்பந்தமாக பேசுவதில்லை. இந்த சம்பளப் பிரச்சினை நீடிப்பதற்கு தொழிலாளர்களும் காரணமாகின்றனர். ஏனெனில் தீர்வினை பெற்றுத்தரமுடியாத தொழிற்சங்கத்தின் பின்னால் தொழிலாளர் அணி திரள்வதால் எவ்விதமான பயனுமில்லை. மேலும் இப்பிரச்சினையை தீர்ப்பதானால் தேயிலை தோட்டங்களை பகிர்ந்தளிக்க வேண்டும். அதனை விடுத்து தனியார் கம்பனிகளிடத்தில் எதிர்பார்த்திருப்பதால் எவ்விதமான பிரச்சினையும் இல்லை.
தற்போது நாம் தீபாவளிக்கான முற்பணத்தினை சற்று அதிகரித்து வழங்குவதற்குரிய ஏற்பாடுகளை செய்து அதற்கு அமைச்சரவை அனுமதியும் பெறப்பட்டுள்ளது. கம்பனிகள் வழங்கும் 10ஆயிரம் முற்பணத்திற்கு அதிகமாக தேயிலை சபையின் நிதியின் ஊடாக தொழிலாளர்களுக்கு ஐயாயிரம் ரூபா மேலதிகமாக கிடைக்கவுள்ளது. ஆகவே தொழிலாளி ஒருவர் 15ஆயிரம் ரூபா முற்பணத்தினை இம்முறை பெறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கேள்வி:- மலையகத்தில் 7பேர்ச் காணிகளை மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதில் தலையீடுகள், தடைகள் ஏற்படுத்தப்படுவதாக கூறப்படுகின்றதே?
பதில்:- அமைச்சர் நவீன் இந்த விடயத்தினை தனியாக செய்யவில்லை. தொழிற்சங்கத் தலைவர்கள் நவீன் திஸாநாயக்கவினை பயன்படுத்தி எனக்கு எதிராக அரசியல் ரீதியான நன்மைகளை அடைவதற்கு முயற்சிக்கின்றார்கள். அதனைவிட தனிப்பட்ட வகையில் அமைச்சர் நவீனுடன் எவ்விதமான பிரச்சினைகளும் இல்லை.
கேள்வி:- 2015ஆம் ஆண்டு ஆட்சிமாற்றத்தின் போது உங்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எவ்வளவு தூரம் நிறைவேற்றப்பட்டுள்ளன?
பதில்:- நாம் பிரதேச சபைகளை தர முயர்த்தக் கோரினோம், நில உரிமையை, வீட்டுத்திட்டங்களை கோரினோம், சுகாதார, கல்வி விடயங்களை முன்னெடுக்க கோரினோம். அதிகார சபையை கோரினோம். அவை அனைத்துமே மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் முழுமை அடையவில்லை. இந்த விடயங்கள் முழுமையடைகின்றபோது எமது மக்கள் வாழ்வாதார எழுச்சியை காண்பார்கள். ஆகவே இவ்விடயங்களை தொடர்ந்தும் முன்னெடுக்க இடமளிக்க வேண்டும் என்பதே எமது தற்போதைய நிலைப்பாடாக உள்ளது.
கேள்வி:- ஒரு கூட்டணியில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பவர் என்ற அடிப்படையில் வடக்கில் ஐந்து கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள இணக்கப்பாட்டினை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில்:- வடகிழக்கு தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்கவில்லை. ஒவ்வொரு அரசாங்கமும் அவர்களை ஏமாற்றியுள்ளது. தற்போதைய அரசாங்கம் சில நடவடிக்கைகளை முன்னெடுத்த போதும் ஆட்சிபலமும், தென்னிலங்கையில் தலைதூக்கியுள்ள இனவாதமும் அதற்கு தடைகளை ஏற்படுத்தி விட்டுள்ளன. ஆகவே எதிர்வரும் காலத்தில் தமிழ் மக்கள் தொடர்ந்தும் ஏமாந்தவர்களாக இருக்கமுடியாது. அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் ஒன்றிணைவதன் ஊடாகவே கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும்.
பிரிந்து நின்றால் எதனையுமே வெல்ல முடியாது. ஆகவே அவர்களின் ஒன்றிணைவு வரவேற்கத்தக்கது. ஆனால் ஜனாதிபதித் தேர்தலில் அவர்கள் நிபந்தனைகளை முன்வைக்க, விளைவானது பின்னடைவுகளையே ஏற்படுத்தும். காரணம், தென்னிலங்கையில் வலுத்துள்ள இனவாதம் அவர்களின் நிபந்தனைகளை ஏற்கும் தரப்பினை நிச்சயமாக தோல்வியுறவே செய்யும். ஆகவே அவர்கள் தமது நியாயமான கோரிக்கைகளை வெல்வதற்கு வேறொரு உபாயமார்க்கத்தினை பின்பற்றுவதே சாலச்சிறந்தது.
நேர்காணல் : ஆர்.ராம்