தமிழரின் உரிமைகளை வலியுறுத்தும் பொது ஆவணத்தில் 5 கட்சிகள் கைச்சாத்து – த.தே.ம.மு. எதிர்ப்பு!

259 0

தமிழரின் உரிமைகளை வலியுறுத்தும் பொது ஆவணத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த 5 கட்சிகளும் (தமிழீழ மக்கள் விடுதலை கழகம், தமிழீழ விடுதலை இயக்கம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ் அரசு கட்சி) கையொப்பமிட்டுள்ளன.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழ் தேசியக் கட்சிகளுக்கிடையிலான இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சியில் யாழில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற சந்திப்பையடுத்து இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த ஆவணம் இரு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாச, கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரிடம் முன்வைக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளுடன் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் அதன் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை. சோ. சேனாதிரஜா, ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன், வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி. வி. கே. சிவஞானம் ஆகியோரும்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செ.கஜேந்திரன் மற்றும் சட்டத்தரணிகளான வி. மணிவண்ணன், க.சுகாஸ் ஆகியோரும், புளொட் சார்பில் அதன் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பா. கஜதீபன் ஆகியோரும்,

ரெலோ சார்பில் அதன் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், செயலாளரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான ந. சிறீகாந்தா, வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா. குகதாஸ் ஆகியோரும்.

ஈ.பி.ஆர்.எல்.எஃவ் சார்பில் அதன் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் அதன் செயலாளரும், வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருமான சி. வி. விக்னேஸ்வரன், ஊடகப் பேச்சாளர் க.அருந்தவபாலன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.