எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் இன்று விநியோகம் – இன்று காலை முதல் பொலிஸார் பாதுகாப்புக் கடமைகளில்!

301 0

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகளை விநியோகிக்கும் செயற்பாடுகள் இன்று (10) முற்பகல் ஆரம்பமாகவுள்ளன. எல்பிட்டிய தொழிற்பயிற்சி அதிகார சபையிலிருந்து இன்று காலை முதல் வாக்குப்பெட்டிகள் விநியோகிக்கப்படவுள்ளன.

முழுமையான பாதுகாப்புடன் வாக்குப் பெட்டிகள் உள்ளிட்ட ஏனைய பொருட்களை வாக்குச் சாவடிகளுக்கு அனுப்புவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காலி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகர் சோமரத்ன விதானபத்திரண குறிப்பிட்டுள்ளார்.

நாளை (11) நடைபெறவுள்ள எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் வாக்களிக்க 53 384 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். 17 தொகுதிகளில் நடைபெறவுள்ள இந்தத் தேர்தலில் 47 மத்திய நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட 5 கட்சிகளைச் சேர்ந்த 155 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் அவர்களிலிருந்து 28 பேர் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

வாக்கெண்ணும் நடவடிக்கைகள் வாக்களிப்பு மத்திய நிலையங்களில் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், எல்பிட்டிய தொழிற்பயிற்சி அதிகார சபையில் அமைக்கப்பட்டுள்ள மத்திய நிலையத்திலிருந்து இறுதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

தேர்தல் மத்திய நிலையங்களில் இன்று காலை முதல் பொலிஸார் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடவுள்ளதாக காலி மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் சோமரத்ன விதானபத்திரண தெரிவித்துள்ளார்.

ஒரு வாக்களிப்பு மத்திய நிலையத்திற்கு 4 பொலிஸார் வீதம் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.