ரணசிங்க பிரேமதாஸ ஜனாதிபதியாகியதன் பின்னர் கட்சித் தலைமை பதவியை ஏற்பதற்கு ஜே.ஆரின் அரசியல் முதிர்ச்சியே காரணம்
பிரிக்கப்படாத நாட்டில் 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதோடு வடக்கு கிழக்கில் உள்ள பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வினை சஜித் பிரேமதாஸவே வழங்குவார் என்று அவரின் தேர்தல் பிரதான செயற்பாட்டதிகாரியும், ஐ.தே.கவின் முன்னாள் பொதுச்செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்க வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,
கேள்வி:- ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் அழைப்பினை ஏற்றுக்கொண்ட உங்களின் மீள் வருகை மற்றும் செயற்பாடுகள் பற்றி கூறுங்கள்?
பதில்:- ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ, என்னை தம்முடன் இணைந்து பயணிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறுவதற்கு என்னுடைய பங்களிப்பு அவசியம் என்றும் கூறி எனக்கான அழைப்பினை பகிரங்கமாகவே விடுத்திருந்தார். செயற்பாட்டு அரசியலிலிருந்து தற்காலிகமாக ஒதுங்கியிருந்த நான் அவரது அழைப்பினை ஏற்றுக்கொண்டேன். தற்போது ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் தேர்தல் பணிகளை முன்னெடுக்கும் பிரதான செயற்பாட்டதிகாரியாக இருக்கின்றேன்.
கேள்வி:- ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளராக இருந்த நீங்கள் 2015இல் திடீரென ராஜபக் ஷ தரப்பினருடன் இணைந்துகொள்ளும் முடிவினை எடுத்தமைக்கான காரணம் என்ன?
பதில்:- 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.கவின் தலைவரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டினையே கொண்டிருந்தேன். செயலாளராக இருந்தாலும் என்னுடைய நிலைப்பாட்டினை செயற்பாட்டு ரீதியாக முன்னெடுப்பதற்கு கட்சியிலிருந்து சில தரப்புக்கள் இடமளித்திருக்கவில்லை. 1992ஆம் ஆண்டுக்குப் பின்னர் எமது கட்சியிலிருந்து ஜனாதிபதி வேட்பாளர் நிறுத்தப்படுவதற்கான வாய்ப்பு கிடைத்திருக்க வில்லை.
ஐந்து தடவைகள் ஜனாதிபதி வேட்பாளரை நியமிப்பதற்கான சந்தர்ப்பங்கள் கிடைத்திருந்தபோதும் அவை கைநழுவவிடப்பட்டிருந்த நிலையில் 2015இல் ஜனாதிபதி வேட்பாளரை நியமிப்பதற்கான பொறிமுறைகளை நாம் மேற்கொண்டிருந்தோம். எனினும் வெளியிலிருந்து வேட்பாளரை தெரிவு செய்து எமது ஆதரவை வழங்குமாறு கோரப்பட்டது. அதற்கான இணக்கப்பாட்டினை என்னால் வழங்க முடியாது என்று கூறியிருந்தேன்.
மூன்று, நான்கு வருடங்களுக்கும் அதிகமாக ஒருவார்த்தை கூட பகிர்ந்துகொள்ளாதிருந்த ரணில் விக்கிரமசிங்கவையும், சஜித் பிரேமதாஸவையும் 2014ஆம் ஆண்டு செப்டெம்பர் 6ஆம் திகதி பசறையில் நடைபெற்ற கூட்டத்தில் இருவரையும் ஒரே மேடையில் ஏற்றியிருந்தேன். அதுமட்டுமன்றி சஜித் பிரேமதாஸவை உபதலைவராக்குவதற்கான முயற்சிகளையும் எடுத்தேன்.
அதற்கு கட்சியிலிருந்த சிலர் எதிர்ப்புக்களை வெளியிட்டிருந்தனர். அவற்றையெல்லாம் கடந்து சஜித்தை உபதலைவர் பதவிக்கு நியமிப்பதற்கான தீர்மானத்தினை எடுக்கும் வகையில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு உந்துதல் அளித்தேன். இதனால் கட்சியினுள் சில தரப்புக்களுடன் முரண்பாடுகள் எழுந்திருந்தன. இந்த நிலைமைகளால் தான் அன்று வெளியேற வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
கேள்வி:- அவ்வாறு வெளியேறினாலும், உங்களுடைய கொள்கைக்கு நேரெதிரான கொள்கையைக் கொண்டிருக்கும் ராஜபக் ஷ தரப்பினருடன் இணையவேண்டும் என்று தீர்மானித்ததேன்?
பதில்:- நான் ராஜபக் ஷ குடும்பத்துடன் இணையவில்லை. எமது கட்சியின் வாக்குகளைப் பயன்படுத்தி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளரை ஜனாதிபதியாக்கும் தீர்மானத்திற்கு எதிராக மிகுந்த மன உளைச்சலுடன் எடுத்த முடிவே அதுவாகும். கொள்கையளவில் எடுக்கப்பட்ட அந்த முடிவை நான் எடுத்திருக்கவில்லை.
கேள்வி:- தற்போது ராஜபக் ஷ வினருக்கு எதிராக தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் உங்கள் முன்னாலுள்ள சவால்கள் என்ன?
பதில்:- இந்த ஜனாதிபதித் தேர்தலானது ஐக்கிய தேசியக் கட்சிக்கு வெற்றியான ஜனாதிபதித் தேர்தலாகும். சஜித் பிரேமதாஸவைப் பொறுத்த வரையில் அனைத்து மட்டங்களிலும் அவருக்கு ஆதரவு காணப்படுகின்றது. ஆகவே புதிய வாக்காளர்களின் ஆதரவினைப் பெற்றுக்கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டியதே அவர் முன்னாலுள்ள பணியாக இருக்கின்றது. ஆகவே ராஜபக் ஷ குடும்பத்தால் எமக்கு எவ்விதமான சவால்களும் ஏற்படப்போவதில்லை. முழு இலங்கையும் புதிய தலைமைத்துவத்தினையே விரும்புகின்றது. மீண்டும் குடும்ப ஆட்சியொன்று இந்த நாட்டில் உருவாகுவதை எந்தவொரு நபரும் விரும்பவில்லை. அதுமட்டுமன்றி தற்போதே சஜித்தின் வெற்றிக்காக முழு நாடுமே ஒன்றிணைந்துள்ளது.
கேள்வி:- மீள்வருகையின் பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனான உறவு எப்படியிருக்கின்றது?
பதில்:- பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எனக்கும் இடையிலான நல்லுறவுகள் முழுமையாக முறிந்து விடவில்லை. வேட்பாளர் நியமனத்தில் இருவருக்கும் இடையில் பரஸ்பர கருத்து வேறுபாடுகள் மட்டுமே ஏற்பட்டிருந்தன. தற்போது எம் இருவரிடையேயும் நட்புறவுகள் உள்ளன.
கேள்வி:- பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதற்கு விருப்பினை வெளியிட்டிருந்தபோதும் அதற்கு வாய்ப்பளிக்கப்பட்டிருக்காமையை எப்படி பார்க்கின்றீர்கள்?
பதில்:- சஜித் பிரேமதாஸ போட்டியிட வேண்டுமென கீழ் மட்டத்திலிருந்து கோரிக்கைகள் எழுந்தன. மாவட்ட ரீதியாக கூட்டங்கள் நடத்தப்பட்டன. இவ்வாறு அனைத்து தரப்பினரதும் முன்மொழிவுகள் மற்றும் கோரிக்கைகளைக் கருத்திற்கொண்டே அவர் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். பல்வேறு தரப்பினரும் வேறுபட்ட நிலைப்பாடுகளை கொண்டிந்தாலும் கட்சியினுள் இருவருக்கும் இடையில் போட்டிகள் காணப்பட்டிருந்தாலும் ஜனநாயகத்தின் அடிப்படையிலேயே தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் எமக்கு எதிரான தரப்பினரை பாருங்கள், அவர்களின் மத்தியகுழு கூடியா வேட்பாளரை தெரிவு செய்தது. குடும்ப உறுப்பினர்கள் ஒன்று கூடியே வேட்பாளரை இறுதி செய்தார்கள். இங்கு தான் நாம் வேறுபட்டு நிற்கின்றோம்.
கேள்வி:- சஜித் பிரேமதாஸவினை களமிறக்குவதற்கு ஐ.தே.கவினுள் எதிர்ப்புக்கள் ஏற்பட்டிருந்த நிலையில் தேர்தலில் அவை பிரதிபலிப்பதற்கு வாய்ப்புக்கள் உண்டல்லவா?
புதில்:- வேட்பாளரை இறுதி செய்வதற்கு முன்னதாக ரணில், கரு, சஜித் என மூன்று தலைவர்கள் தொடர்பில் எதிர்பார்ப்புக்கள் இருந்தன. கட்சி மூன்று அணிகளாக பிளவுபட்டிருந்தன. ஆனால் வேட்பாளராக சஜித் பெயரிடப்பட்டு இறுதித் தீர்மானம் எடுத்ததன் பின்னர் அதனை யாரும் எதிர்க்கவில்லை. அனைத்து உறுப்பினர்களும் சஜித் வெற்றி பெறுவதற்காக ஒருங்கிணைந்து செயற்படுகின்றனர்.
கேள்வி:- ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னரே ரணசிங்க பிரேமதாஸ கட்சித்தலைமையை ஏற்றிருந்தார். அவர் கட்சித் தலைமையேற்கும் இந்நிகழ்வில் தாங்களும் பங்கேற்றிருந்த நிலையில் அந்த அனுபவத்தை பற்றி கூறுங்கள்?
பதில்:- ரணசிங்க பிரேமதாஸ இந்த நாட்டின் புகழ்பூத்த பிரதமராவார். இந்த நாட்டில் ஜே.ஆர்- – பிரேமதாஸ இணை தான் அதிசிறந்த அரசியல் இணையாக காணப்படுகின்றது. இக்காலப்பகுதியில் தான் நாட்டின் முக்கிய பல விடயங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. பிரேமதாஸ ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டதன் பின்னரே கட்சி தலைமையைப் பொறுப்பேற்றிருந்தார். பிரேமதாஸ அவ்வாறு கட்சித் தலைமையையும் பொறுப்பேற்று அரசியல் செயற்பாட்டினை முன்னெடுப்பதற்கு ஜே.ஆரின் அரசியல் முதிர்ச்சியே காரணமாக இருந்தது. அதனாலேயே கட்சியின் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தன.
கேள்வி:- சஜித் பிரேமதாஸ தற்போது கட்சியின் உபதலைவராக இருக்கின்ற நிலையில் எதிர்காலத்தில் அவருடைய தந்தைபோன்று கட்சியின் தலைமையை ஏற்பாரா?
பதில்:- தற்போது ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான நடவடிக்கைகளே முன்னெடுக்கப்படுகின்றன. அதன் பின்னரே பிரதமர் யார், அமைச்சர்கள் யார், கட்சித்தலைவர் யார் என்பது பற்றி சிந்திக்கலாம். ஜனாதிபதியாக சஜித் பிரேமதாஸ பதவியேற்ற பின்னர் கட்சியின் செயற்குழுவும் அவரும் அதுபற்றி தீர்மானிக்க முடியும். அதுபற்றி தற்போது கலந்துரையாட வேண்டியதில்லை. பிரதமரின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஓகஸ்ட் வரை உள்ளது. அதேநேரம் மார்ச் மாதத்திற்கு பின்னர் பாராளுமன்றத்தினைக் கலைக்கவும் முடியும். புதிய ஜனாதிபதி பதவி ஏற்ற பின்னர் பிரதமர், அமைச்சரவையை நியமிப்பது சம்பிரதாயமான விடயமாகும். அதில் எவ்விதமான பிரச்சினைகளும் இல்லை. அத்துடன் தனது குடும்ப உறுப்பினர் ஒருவரை சஜித் பிரதமராக நியமிக்க மாட்டார் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும்.
கேள்வி:- 25வருடங்கள் கட்சித் தலைமையும் ஆசியப்பிராந்தியத்தில் மதிப்பு மிக்க அரசியல் தலைவராக இருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட இறுதியாக ஒரு சந்தர்ப்பத்தினை வழங்கியிருக்கலாமல்லவா?
பதில்:- அவர் இரண்டு தடவைகள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோதும் வெற்றிபெற்றிருக்கவில்லை. இதனால் கட்சியும் பின்னிலை அடைந்தது. கட்சியின் அனைத்து தரப்பினரும் மாற்றத்தினை விரும்பியே இருந்தார்கள். அதுவே யதார்த்தமாகவும் காணப்பட்டது. ரணில் விக்கிரமசிங்க மிகவும் திறமைவாய்ந்த புலமை மிக்கவர் என்பதில் எவ்விதமான மாற்றுக்கருத்திற்கும் இடமில்லை. அதனாலேயே நான்கு தடவைகள் அவர் பிரதமர் பதவியை வகித்துள்ளார்.
கேள்வி:- தமிழர் தரப்புக்கு வாக்குறுதிகள் பல கடந்த ஆட்சிக்காலத்திலும் வழங்கப்பட்டு நிறைவேற்றப்பட்டிருக்காத நிலையில் எந்த அடிப்படையில் மீண்டும் நம்பிக்கை வைக்க முடியும் என்று கூறுவீர்கள்?
பதில்:- சஜித் பிரேமதாஸ சம்பிரதாய அரசியல்வாதி அல்ல. இந்த நாட்டில் உள்ள அனைத்து மக்களினதும் பிரச்சினைகளை நன்கு அறிந்தவராக இருக்கின்றார். அதுமட்டுமன்றி தற்போது வீடமைப்பு அமைச்சராக இருக்கும் அவர் தனது அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் நூற்றுக்கு 40சதவீதத்தினை வடக்கு கிழக்கிற்கே வழங்கியுள்ளார். கொழும்பில் உள்ள தமிழ்த் தலைவர்கள் அதிகாரப் பகிர்வு சம்பந்தமாக பேசுகின்றார்களே தவிர, வடக்கு மக்கள் தமக்கு அடிப்படை விடயங்களை, வேலைவாய்ப்புக்களை, அபிவிருத்தியை ஏற்படுத்தி தருமாறே கோருகின்றார்கள்.
இவற்றை ஆரம்பத்திலேயே செய்திருந்தால் தனி நாடு கோரி அவர்கள் போராடியிருக்கமாட்டார்கள். இவ்வளவு தூரம் அனர்த்தங்களும் இடம்பெற்றிருக்காது. ஆகவே சஜித் பிரேமதாஸ ஜனாதிபதியாகியதும் மக்கள் கவலை கொண்டிருக்கும் விடயங்களுக்கு முதன்மை தானம் அளித்து தீர்வுகளை வழங்குவார்.
பிரிக்கப்படாத நாட்டில் 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதோடு, புதிய அரசியலமைப்பு, பாராளுமன்ற முறைமை போன்ற விடயதானங்களில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட விடயங்களை கலந்துரையாடி தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு சஜித் இணங்கியுள்ளார். வடக்கு கிழக்கில் உள்ள பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வினை சஜித் பிரேமதாஸ வழங்குவார் என்று உறுதியளிக்கின்றேன்.
நேர்காணல் : ஆர்.ராம்