இயக்குனர் மணிரத்தினம் உள்ளிட்ட 49 பேர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள தேசத் துரோக வழக்கை ரத்து செய்ய வேண்டும்! ஒரு லட்சம் பேரின் கையொப்பங்களோடு பிரதமருக்குக் கடிதம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
நாட்டின் உயரிய பதவியான குடியரசுத் தலைவர் உள்ளிட்ட எவருக்கும் இந்திய நாட்டு குடிமக்கள் எவரும் கடிதம் எழுதுவதற்கு உரிமை உள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தில் பாதுகாக்கப்பட்ட கருத்துரிமை என்பது ஆட்சியில் இருப்பவர்கள் விரும்பும் கருத்துகளைப் பேசுவதற்கான உரிமை அல்ல, குடிமக்கள் தாம் நினைக்கும் கருத்தை வெளிப்படுத்துவதற்கான உரிமையாகும். இந்த கருத்துரிமையை நீதித்துறையைப் பயன்படுத்தியே பறிக்க முயற்சிப்பது அரசியலமைப்புச் சட்டத்தையே அவமதிப்பதாகும் இந்தப் போக்கை அனுமதிப்பது ஜனநாயகத்தை பாழ்படுத்திவிடும்.
பிரதமருக்கு எழுதப்பட்ட கடிதத்தில் எந்த ஒரு உண்மைக்குப் புறம்பான செய்தியோ, யாரையும் புண்படுத்தக் கூடிய செய்தியோ இல்லை. நாட்டில் அப்பாவி மக்கள் பசுவின் பெயரால் படுகொலை செய்யப்படுகின்றனர். அது நாட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்துகிறது என்பதைத்தான் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தனர். 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ஆம் தேதியும்; 2017 ஆம் ஆண்டு ஜூன் 30 மற்றும் ஜூலை 17 ஆகிய தேதிகளிலும் பிரதமர் மோடி அவர்களே பசுவின் பெயரிலான வன்முறையைக் கண்டித்துப் பேசியிருக்கிறார். அத்தகைய வன்முறையாளர்கள்மீது கடுமையாக நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு வலியுறுத்தியிருக்கிறார். இந்தத் தகவலை 2018 ஜூலை மாதத்தில் மாநிலங்களவையில் மத்திய உள்துறை துணை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். பிரதமர் பேசிய அதே கருத்தை கடிதத்தில் தெரிவித்தவர்கள் எப்படி தேசத்துரோகிகளாவார்கள்?
மணி ரத்தினம் உள்ளிட்டோர் மீது பதிவு செய்யப்பட்டிருக்கும் வழக்கை ரத்து செய்யவும், கருத்துரிமையைப் பாதுகாக்கவும் வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஒரு லட்சம் பேரிடம் கையொப்பம் பெற்று பிரதமருக்குக் கடிதம் அனுப்புவதென முடிவுசெய்துள்ளோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.