மஹிந்த -கோத்தா கொடுங்கோல் ஆட்சியில் தந்தையை இழந்தேன்-ஹிருணிகா

244 0

ஜனநாயகமானதும் சுதந்திரமானதுமான நாட்டை ஐக்கிய தேசிய கட்சியால் மாத்திரமே கட்டியெழுப்ப முடியும் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரன், மஹிந்த – கோத்தா ஆட்சி காலத்தில் இவை இரண்டுமே காணப்படவில்லை. அவர்களது கொடுமையான ஆட்சி காலத்தில் பாதிக்கப்பட்டவர்களில் நானும் உள்ளடங்குகின்றேன் என்றும் கூறினார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் நாட்டின் நிலைமை எவ்வாறு இருந்தது என்பதை நினைவுபடுத்த வேண்டியுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ பற்றி வீட்டுக்குள் கதைப்பதற்கும் மக்கள் பயந்தனர். சாதாரண மக்கள் மாத்திரமின்றி ஊடகங்களுக்கோ ஊடகவியலாளர்களுக்கோ எவ்வித சுதந்திரமும் காணப்படவில்லை.

லசந்த விக்கிரமதுங்க மற்றும் பிரகீத் எக்னலிகொட உள்ளிட்டவர்களின் விவகாரம் இன்று நகைச்சுவை போன்றாகிவிட்டது. கோத்தாபய மற்றும் மஹிந்த ராஜபக்ஷவினுடைய கொலைப் படலத்தில் நானும் பாதிக்கப்பட்டுள்ளேன்.

என்னுடைய தந்தையை துமிந்த சில்வா தான் கொலை செய்தார் என்பது உண்மை. அவர் தைரியமாகச் சென்று என்னுடைய தந்தையை கொலை செய்வதற்கு பாதுகாப்பு வழங்கியவர் கோத்தாபய ராஜபக்ஷவேயாவார் என்றும் அவர் கூறினார்.