மூத்த அரசியல்வாதிகளான டபிள்யூ.பி. ஏக்கநாயக்க மற்றும் அத்தாவுத செனவிரத்ன ஆகியோர் என்னுடன் இணைந்துகொண்டிருப்பது எனது வெற்றிப்பயணத்துக்கு பெரும் சக்தியாகும் என அமைச்சரும் முன்னணி ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
அனுராதபுரம் மாவட்ட முன்னாள் பிரதி அமைச்சர் டபிள்யூ.பி. ஏக்கநாயக்க மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கேகாலை மாவட்ட முன்னாள் அமைச்சர் அதாவுத செனவிரத்ன ஆகியோர் ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை சந்தித்து அவருக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்து அவருடன் இணைந்துகொண்டுள்ளனர்.
அமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் நேற்று இ்டம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர்கள் இருவரும் கலந்துகொண்டு தங்களது ஆதரவை வழங்குவதாக அறிவித்தனர். அதனைத்தொடர்ந்தே அமைச்சர் சஜித் பிரேமதாச இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
டபிள்யூ.பி. ஏக்கநாயக்க ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து சாதாரண மக்களில் இருந்து அரசியலை மேற்கொண்டவர். பிற்காலத்தில் கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் வேறு திசைக்கு சென்றிருந்தார். என்றாலும் அவர் தற்போது மீண்டும் தாய் வீட்டுக்கு வந்து எம்முடன் இணைந்துகொண்டிருப்பது எமக்கு பெரும் சக்தியாகும்.
அதேபோன்று இடதுசாரி கொள்கையில் பாரிய சக்தியாக திகழ்ந்த முன்னாள் அமைச்சர் அதாவுத செனவிரத்ன எப்போதும் சாதாரண மக்களுடன் இணைந்தே அவர் அரசியல் பயணத்தை மேற்கொண்டிருந்தார். என்மீது நம்பிக்கை வைத்து இவர்கள் தற்போது எங்களுடன் கைகோர்த்திருப்பது எமக்கு பெரும் சக்தியாகும்.
முன்னோடி அரசியல் இயக்கத்தைச்சேர்ந்த பல கட்சிகள் எனது பயணத்துக்கு ஆதரவளிக்க எம்முடன் இணைந்துகொண்டிருக்கின்றன என்றார்.
இதன்போது அதாவுத செனவிரத்ன தெரிவிக்கையில், கடந்த 10 வருடங்களாக அரசியல் வாதிகள் ஊழல் மோசடி தொடர்பாக கதைத்னர். என்றாலும் அமைச்சர்களின் செயற்பாட்டினால் பாராளுமன்றம் தொடர்பில் மக்கள் விரக்தியடைந்திருக்கின்றனர். அவ்வாறான அரசியல் வாதி அல்லாத ஒருவரை நாட்டுக்கு தெரிவுசெய்யவேண்டிய தேவை இருக்கின்றது. அதற்காகவே முன்னோடி அரசியல் இயக்கமாக பல கட்சிகள் இணைந்து செயற்பட்டு வருகின்றோம்.
தற்போதுள்ள நிலையில் எந்த கட்சிக்கு நாங்கள் ஆதரவளிப்பதென ஆராய்ந்து பார்த்தபோது இரண்டு தரப்பிலும் குறைப்பாடுகள் இருக்கின்றன. அதனால் குறைந்தளவிலான பாதிப்பும் கூடுதலான நன்மையும் நாட்டுக்கு ஏற்படுகின்ற வேட்பாளருக்கு ஆதரவளிக்க நாங்கள் தீர்மானித்திருக்கின்றோம். மொட்டு கட்சியில் பாரியளவில் மோசடியுடன் தொடர்ப்பு பட்டவர்கள் இருக்கின்றனர். இந்த பக்கத்திலும் மத்திய வங்கி மோசடி குற்றத்துக்கு ஆளானவர்களும் இருக்கின்றனர்.
அதனால் நாட்டில் ஊழல் மோசடியை கட்டுப்படுத்திக்கொண்டால் ஏற்படுகின்ற செலவில் 40வீதத்தை மீதப்படுத்திக்கொள்ளலாம். அதனை சஜித் பிரேமதாச மேற்கொள்ளவேண்டும். அத்துடன் எதிரணிக்கு நாங்கள் ஆதரவளித்தால் பாரிய பிரச்சினை நாட்டுக்கு ஏற்படும் என்ற நம்பிக்கை எமக்கிருக்கின்றது. அவ்வாறான பிரச்சினை ஏற்பட்டாலும் சாதாரண அளவே ஏற்படும் என்ற நம்பிக்கையிலே சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க முன்வந்தோம் என்றார்.
இதன்போது டபிள்யூ.பி. ஏக்கநாயக்க தெரிவிக்கையில்,
மக்களுக்கு சேவை செய்வதாக தெரிவித்தே அரசியலுக்கு வருகின்றனர். ஆனால் வந்த பின்னர் அவர்கள் என்ன செய்கின்றார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த நிலையை மாற்ற பொருத்தமானவர் சஜித் பிரேமதாச என்பதை உணர்ந்துகொண்டே அவருக்கு ஆதரவளிக்க முன்வந்தோம் என்றார்.