அம்பாறை மாவட்டத்தின்  தமிழ் பேசும்  மக்கள் செறிந்து வாழும் நாவிதன்வெளி பகுதியில் புதிய நிரந்தர சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளதுடன்,  சாய்ந்தமருது பகுதிகளில் இராணுவத்தினரின் குழு ஒன்று மற்றுமொரு பாரிய  தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

இன்று திங்கட்கிழமை (30) மாலை திடிரென உழவு இயந்திரத்தில் வந்த சுமார் 15 க்கும்  அதிகமான  இராணுவத்தினர் நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்கு அருகே உள்ள சவளக்கடை சந்தியில் நிரந்திர சோதனை சாவடி ஒன்றை அமைத்து சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

அதே போன்று இராணுவத்தினருக்கு இன்று  கிடைக்கப்பெற்ற  தகவல் ஒன்றினையடுத்து கனரக வண்டி ஒன்றில் சுமார் 40க்கும் அதிகமான இராணுவத்தினர்  சாய்ந்தமருது பகுதியில்  தேடுதலில் ஈடுபட்டனர்.

குறித்த தேடுதல் நடவடிக்கையானது  சாய்ந்தமருது அல் ஹிலால் வீதியில் அமைந்துள்ள   வீடுகள்,  மையவாடியை அண்டிய  பகுதிகளில் தேடுதலை மேற்கொண்டதுடன்  குறிப்பிட்ட பிரதேசத்தில் வீதியில் சென்ற பொதுமக்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

மேலும் அண்மைக்காலமாக அடிக்கடி இடம்பெறும் இராணுவ சோதனை நடவடிக்கைகளால் மக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் குறித்த பகுதிகளில் கடந்த ஒரு வாரங்களாக  இராணுவத்தினரால்  தொடர் தேடுதல்கள் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.