கஞ்சா செடிகளுடன் யாழில் இருவர் கைது

247 0

காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கீரிமலை பகுதியில் வீட்டு வளவில், கஞ்சா செடிகளை வளர்த்து வந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்தோடு கஞ்சாவினை கொள்வனவு செய்ய சென்ற இளைஞனும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காங்கேசன்துறை விஷேட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் குறித்த சந்தேகநபர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தின் விஷேட குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய குறித்த வீட்டில் தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது வீட்டுத் தோட்டத்துக்குள் மறைவாக வளர்த்த மூன்று கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டன.

அத்துடன் குறித்த வீட்டில் கஞ்சாவினை கொள்வனவு செய்ய வந்திருந்த கீரிமலை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞனும் கைது செய்யப்பட்டதாக காங்கேசன்துறை விஷேட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட இளைஞனிடம் இருந்து எட்டு கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேநபர்கள் இருவரையும் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக விஷேட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

அத்தோடு மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் அவர்களை முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.