ஆந்திரா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 37 ஆக உயர்வு

191 0

ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ஏற்பட்ட படகு விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.

ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கோதாவரி ஆறு பாய்ந்து ஓடுகிறது. இந்த மாவட்டத்தில் தேவிப்பட்டினம் அருகே கண்டி போச்சம்மா கோவிலில் இருந்து பாப்பிகொண்டலு என்ற சுற்றுலாத் தலத்துக்கு கோதாவரி ஆற்றின் வழியாக தனியார் படகில் 60-க்கும் அதிகமானோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தனர்.
கச்சுலூரு பகுதி அருகில் அந்த படகு திடீரென நிலைதடுமாறி கவிழ்ந்து விழுந்தது. தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற மீட்பு படையினர் ஆற்றில் மூழ்கியவர்களில் 23 பேரை உயிருடன் மீட்டனர். முதல் கட்ட தகவலில் 12 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, இந்த விபத்தில் பலியான மேலும் 21 உடல்களை மீட்புக்குழுவினர் மீட்டதால் பலி எண்ணிக்கை 33 ஆக உயர்ந்தது.
இந்நிலையில், ஆந்திரா படகு விபத்தில் மூழ்கியவர்களில் மேலும் சிலரது உடல்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து படகு விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது. மேலும் காணாமல் போன 15 பேரை தேடும் பணி நடந்து வருகிறது என அவர்கள் தெரிவித்தனர்.