வெப்ப சலனம் மற்றும் காற்றின் மேலடுக்கு சுழற்சி காரணமாக 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மழை நிலவரம் குறித்து சென்னை வானிலை மைய அதிகாரி கூறியதாவது:-
வெப்ப சலனம் மற்றும் காற்றின் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும். உள் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுக்கோட்டை மாவட்டம் உடையாளிபட்டி 7 செ.மீ, தஞ்சாவூர் 6 செ.மீ., திருமயம், கமுதி, வல்லம், கந்தர்வக்கோட்டை, புதுக்கோட்டை, ஆத்தூர் (சேலம் மாவட்டம்), வலங்கைமான், சிவகங்கை, பட்டுக்கோட்டை, மயிலாடுதுறை, தேவக்கோட்டை, காரைக்குடி தலா 5 செ.மீ.
கீரனூர், சோழவரம், பெருங்கலூர், கும்பகோணம் 4 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

