அயோத்தியில் விரைவில் ராமர் ஆலயம் அமைக்கப்படும்- இல.கணேசன் பேச்சு

295 0

விரைவில் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் ஆலயம் அமைக்கப்படும் என்று இல கணேசன் பேசியுள்ளார்.

மத்தியில் பா.ஜ.க. அரசு அமல்படுத்தி வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை மக்களிடம் எவ்வாறு எடுத்து செல்வது, பா.ஜ.க. நிர்வாகிகள் மக்களுடனும், அரசு துறைசார்ந்த அதிகாரிகளிடமும் எவ்வாறு தொடர்பு கொள்வது என்பது குறித்த ஆலோசனைக்கூட்டம் உடன்குடி பா.ஜ.க. அலுவலகத்தில் நடந்தது.
மாவட்ட செயலாளர் சிவமுருகன் ஆதித்தன் தலைமை வகித்தார். உடன்குடி ஒன்றிய தலைவர் திருநாகரன், நகர தலைவர் ஜெயக்குமார், மாவட்ட நுண்பிரிவு தலைவர் செல்வகணபதி, ஒன்றிய அமைப்பு செயலர் அழகேசன், பொதுச்செயலர் சிவந்திவேல், மாவட்ட மகளிரணி பொதுச்செயலர் நெல்லையம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான இல.கணேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். பின்பு அவர் நிர்வாகிகளிடம் பேசியதாவது:-
பா.ஜ.க. அரசு முத்தலாக் தடை, 370-வது பிரிவு நீக்கம் என பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விரைவில் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் ஆலயம் அமைக்கப்படும். காவல்துறை, வங்கி அதிகாரிகள் மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்களுடன் பா.ஜ.க. நிர்வாகிகள் நல்ல தொடர்பை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். பா.ஜ.க. அரசின் திட்டங்களை மக்களின் மத்தியில் எளிதாக புரியும் வகையில் கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதில் உடன்குடி, திருச்செந்தூர் ஒன்றியங்களில் இருந்து ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.