காணாமற்போனோர் அலுவலகத்தின் யாழ்.பணியகத்தை அகற்றக் கோரி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்

212 0

காணாமற்போனோர் அலுவலகத்தின் (Office on Missing Persons – OMP) யாழ்ப்பாண பிராந்திய பணியகத்தை அகற்றுவரையான தொடர் போராட்டத்தை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று நண்பகல் ஆரம்பித்தனர்.யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள காணாமற்போனோர் அலுவலகத்தின் யாழ்ப்பாண பிராந்திய பணியகத்துக்கு முன்பாக இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக நினைவேந்தல் நிகழ்த்திய காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், அங்கிருந்து காணாமற்போனோர் அலுவலகத்தின் யாழ்ப்பாண பிராந்திய பணியகத்துக்குச் சென்று இந்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

காணாமற்போனோர் அலுவலகத்தின் யாழ்ப்பாண பிராந்திய பணியகத்தை திறப்பதற்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதனையும் மீறி மிகவும் இரகசியமாக அதிகாலை வேளை அந்தப் பணியகம் கடந்த மாத இறுதியில் திறந்துவைக்கப்பட்டது.

இந்த நிலையில் அந்தப் பணியகத்தை அகற்றுமாறு கோரி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தொடர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.