அமைச்சர் ரவூப் ஹக்கீமிற்கு கண்டனம் வெளியிட்டு தமிழ் தேசிய முன்னணி அறிக்கை

219 0

அமைச்சர் ரவூப் ஹக்கீமின் அரசியல் தலையீட்டுக்குக் கண்டனம் வெளியிட்டுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி, யாழ். பல்கலைக்கழக ஊழியர்களின் போராட்டத்திற்குப் பூரண ஆதரவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் செயலாளர் செல்வராச கஜேந்திரன் இன்று (புதன்கிழமை) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “யாழ். பல்கலைக்கழத்திற்கு கல்விசாரா ஊழியர்களை ஆட்சேர்த்துக் கொள்ளும் நடைமுறையை பக்கச்சார்பு அற்றதாகவும் அரசியல் தலையீடு அல்லாமலும் மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழக ஊழியர்களினால் முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி பூரண ஆதரவு தெரிவித்துக் கொள்கின்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊழியர்களை ஆட்சேர்ப்புச் செய்வதில் பக்கச் சார்புகளும் முறைகேடுகளும் நிலவுவதாகவும் அரசியல் தலையீடு காணப்படுவதாகவும் ஊழியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

உயர் கல்வி அமைச்சிலிருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பப்பட்டுள்ள ஆட்சேர்ப்புப் பட்டியலில் வடக்கு மாகாணத்திலிருந்து விண்ணப்பித்திருந்த 400இற்கும் அதிகமான கல்விசாரா ஊழியர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் ஒப்பந்த நிறுவனமொன்றின் கீழ் பணியாற்றுகின்ற 53 பேர்களின் பெயர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகின்ற 30இற்கும் மேற்பட்ட ஊழியர்களின் பெயர்கள், வவுனியா வளாகத்தில் பணியாற்றுகின்ற ஊழியர்களின் பெயர்கள் தவிர்க்கப்பட்டு வடக்கு மாகாணத்திற்கு வெளியே இருந்து அமைச்சர் ரவூப் ஹக்கீம் தனது ஆதரவாளர்களின் பெயர்களை இணைத்து ஆட்சேர்ப்புப் பட்டியலை அனுப்பியுள்ளதாகவும் ஊழியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. அமைச்சரின் இச்செயற்பாட்டினை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இந்நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நிலவுகின்ற ஆட்சேர்ப்பு நடைமுறையிலுள்ள பிரச்சினைகள் மற்றும் நிர்வாக முறைகேடுகள் போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வை பெற்றுத் தருமாறு கோரி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் கடந்த வெள்ளிக்கிழமை  பல்கலைக்கழக நுழைவாயிலை இடைமறித்து கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

எனினும் அவர்களது கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதுடன் ரவூப் ஹக்கீம் மீண்டும் அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் தான் முன்னதாக அனுப்பியிருந்த ஆட்சேர்ப்புப் பட்டியலிலுள்ளவர்களுக்கு நியமனங்கள் வழங்குவதை விரைவுபடுத்துமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு அவர் அழுத்தம் கொடுத்துள்ளதாக ஊழியர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

தமிழர்களின் தொழில் வாய்ப்பை திட்டமிட்டு பறிக்கும் நோக்கிலும் இனங்களுக்கு இடையில் விரிசலை ஏற்படுத்தும் வகையிலும் பல்கலைக்கழக நிர்வாக செயற்பாடுகளை சீர் குலைக்கும் வகையிலும் அரசியல் தலையீடுகளை மேற்கொள்ளும் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் செயற்பாட்டினை மிகவும் வன்மையாகக் கண்டிப்பதுடன் அவர் தனது அரசியல் தலையீடுகளை நிறுத்திக் கொள்ள வேண்டுமேனவும் வலியுறுத்துகின்றோம்.

மேலும் பல்கலைக்கழக நிர்வாகம் அத்தகைய செயற்பாடுகள் தொடர இடமளிக்கக்கூடாதெனவும் கோருகின்றோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.