தனித்து போட்டியிட்டாலும் சுதந்திர கட்சி வெற்றி பெறும் : குமார வெல்கம

231 0

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வேறெந்த கட்சியுடனும் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, தனித்து போட்டியிட்டாலும் சுதந்திர கட்சியால் வெற்றி பெற முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

கூட்டணி அமைக்காமல் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியால் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று எனக்கு முழுமையான நம்பிக்கை இருக்கிறது. நாட்டைப் பற்றியும், கட்சியைப் பற்றியும் சிந்தித்தால் நாம் தனித்தே போட்டியிட வேண்டும்.

சுதந்திர கட்சி – பொதுஜன பெரமுன கூட்டணி அமைப்பதில் சின்னம் குறித்து இருதரப்பிலும் கருத்து முரண்பாடுகள் காணப்படுவதை அறிய முடிகிறது. ஆனால் தற்போது கட்சியோ சின்னமோ முக்கியத்துவமல்ல. நாட்டைப் பற்றியே சிந்திக்க வேண்டியுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சின்னமான வெற்றிலைச் சின்னத்தில் பொதுஜன பெரமுன போட்டியிட தீர்மானித்தாலும் எனக்கு அதில் திருப்தியிலில்லை. காரணம் யாருடனும் கூட்டணி அமைப்பதை நான் விரும்பவில்லை.

ஏனைய சிறு கட்சிகளுடன் இணைந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஜனாதிபதித் தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும். அவ்வாறு தனித்து போட்டியிட்டாலும் நிச்சயமாக வெற்றி பெற முடியும் என அவர் தெரிவித்தார்.