ஆமை வேகத்தில் நடக்கும் போரூர்-குன்றத்தூர் சாலை பணி – வாகன ஓட்டிகள் அவதி

321 0

போரூர்-குன்றத்தூர் சாலை பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருவதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர்.

சென்னையின் முக்கிய நுழைவு வாயிலாக விளங்குவது போரூர்-குன்றத்தூர் சாலை. குன்றத்தூர், நந்தம்பாக்கம், சோமங்கலம், சிறுகளத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பெரும்பாலான பொதுமக்கள் இந்த சாலையைத்தான் பயன்படுத்தி வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோயம்பேட்டில் இருந்து ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சிப்காட்டிற்கு குடிநீர் எடுத்துச்செல்லும் பணிக்காக இந்த சாலையின் ஒரு பகுதியில் பள்ளம் தோண்டி ராட்சத குழாய்கள் அமைக்கப்பட்டது.

அந்த பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது இந்த சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி நடந்து வருகிறது. ஆனால் பணிகள் மிகவும் ஆமை வேகத்தில் நடந்து வருவதால் இந்த சாலையை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

ஜல்லிக்கற்கள் கொட்டி பல நாட்களாகியும் சாலை அமைக்காமல் அப்படியே உள்ளது. அதன் மீது வாகனங்கள் செல்வதால் ஜல்லிகள் அனைத்தும் கலைந்து தார் சாலை முழுவதும் கற்கள் நிறைந்த சாலைகளாக உள்ளது. இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஜல்லி கற்களில் சறுக்கி ஆங்காங்கே விழுந்து, விழுந்து செல்கின்றனர்.

காலை, மாலை நேரங்களில் அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. மழைக்காலங்களில் சாலையில் எங்கு பள்ளம் உள்ளது என்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விழுந்து செல்கின்றனர். இந்த வழியாக பஸ்சில் பயணம் செய்யும் நோயாளிகள் மிகவும் பாதிப்படைந்து வருகின்றனர்.

எனவே ஆமை வேகத்தில் நடந்து வரும் இந்த சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடிக்கடி விபத்துகள் நிகழ்வதால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் இந்த சாலையில் செல்வதற்கு பயந்து போரூர், அய்யப்பன்தாங்கல், குமணன்சாவடி, மாங்காடு வழியாக சுற்றி செல்கின்றனர். இதனால் அந்த பகுதியும் வாகன நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.

இந்த சாலை மழைக்காலங் களில் சகதியாகவும், கோடை காலத்தில் புழுதி பறக்கும் சாலையாகவும் மாறி, மாறி காட்சி அளிக்கிறது. ஆனால் வாகன ஓட்டிகளின் அவதி மட்டும் என்றும் நிலை மாறாமல் உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.