அவசரகால சட்டத்தினை நீடிப்பதில்லையென ஜனாதிபதி தீர்மானம்

402 0

உயிர்த்தஞாயிறு தாக்குதலின் பின்னர் நடைமுறைக்கு வந்த அவசரகால சட்டத்தினை கைவிடுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார் என ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஏப்பிரல் 21 ம் திகதிக்கு பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை பயன்படுத்தி ஒவ்வொரு மாதம் 22 ம் திகதியும் அவசரகால சட்டத்தினை நீடித்து வந்தார்.

எனினும் ஜனாதிபதி அவசரகாலகட்டச்சட்டத்தினை நீடிப்பதில்லை என தீர்மானித்துள்ளார்  என குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் வியாழக்கிழமையுடன்  அவசரகால சட்டத்தினை முடிவிற்கு கொண்டுவந்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளன.

ஜனாதிபதி அவசரகாலசட்டத்தினை நீடிப்பதற்கான புதிய அறிவிப்பை வெளியிடவில்லை என ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

இதேவேளை அரசாங்க அச்சககூட்டுத்தாபனமும்  அவசரகால சட்டத்தை நீடிப்பதற்கான புதிய வர்த்தமானி அறிவித்தல் எதுவும் கிடைக்கவில்லை என்பதை உறுதிசெய்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் கடுமையான அவசரகால சட்டத்தினை பயன்படுத்தி தாக்குதலை மேற்கொண்டவர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகள் இடம்பெற்றன.

இதேவேளை இலங்கையில் சுமூகநிலை ஏற்பட்டுவிட்டது என்ற செய்தியை சுற்றுலாப்பயணிகளிற்கு தெரிவிப்பதற்காக அவசரகாலநிலையை நீக்குமாறு சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க இந்த வாரம் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.