பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல்- கோவையில் உச்சபட்ச பாதுகாப்பு

238 0

தமிழகத்தில் ஊடுருவி உள்ள பயங்கரவாதிகள் கோவையில் பதுங்கியிருப்பதாக தகவல் வெளியானதால், கோவையில் உச்சபட்ச பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 6 பேர் இலங்கை வழியே தமிழகத்திற்குள் ஊடுருவியிருப்பதாகவும், இலங்கையைப் போன்று தமிழகத்திலும் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாகவும் தமிழக டிஜிபி திரிபாதிக்கு மத்திய உளவுத்துறை தகவல் அளித்துள்ளது.
உளவுத்துறையின் இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தும்படி அனைத்து மாவட்ட எஸ்.பி.க்கள் மற்றும் காவல் ஆணையாளர்களுக்கு டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் கடலோர பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான படகுகளை கண்காணிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி நேற்று இரவு முதலே அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தமிழகத்தில் ஊடுருவியிருக்கும் 6 பயங்கரவாதிகளும் கோவையில் பதுங்கியிருப்பதாக தகவல் வெளியானது. இதனால் கோவையில் உச்சபட்ச பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. கோவை முழுவதும் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். பொது இடங்கள் மற்றும் பதற்றமான இடங்களில் போலீசார் தொடர்ந்து ரோந்து சுற்றி வருகின்றனர்.
நெற்றியில் விபூதி, குங்குமம் அணிந்து மாறுவேடத்தில் ஊடுருவி உள்ள பயங்கரவாதிகளில் ஒருவன் பாகிஸ்தானைச் சேர்ந்தவனாக இருக்கலாம் என்றும், மற்ற 5 பேரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் எனவும் உளவுத்துறை கூறி உள்ளது.