யாழில் 65 கிலோ கிராம் கஞ்சா மீட்பு

383 0

நெல்லியடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கெப் ரக வாகனத்தில் கஞ்சா போதைப்பொருளைக் கடத்திச் சென்றவர்களை சிறப்பு அதிரடிப் படையினர் துரத்திச் சென்ற போதும் அவர்கள் கஞ்சாவை போட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

65 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டது. சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நெல்லியடி – துன்னாலை வீதியில் நேற்றிரவு 11 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

“அரச புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் சிறப்பு அதிரடிப்படையினர், கெப் ரக வாகனத்தைத் துரத்திச் சென்றனர். எனினும் அதில் பயணித்தவர்கள் கஞ்சா பொதிகளை வீசிவிட்டுத் தப்பிச் சென்றனர்.

65 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் பொதிகள் மீட்கப்பட்டன. அவை நெல்லியடிப் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கெப் ரக வாகனம் அடையாளம் காணப்பட்ட நிலையில் அதனை தேடி சிறப்பு அதிரடிப் படையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். சந்தேகநபர்கள் விரைவில் கைது செய்யப்படுவர்” என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.