பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைப் போன்றதொரு சிறந்த தலைவரை இனியொருபோதும் உருவாக்க முடியாது. இதனை நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்த கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், இவ்வாறு சிறப்பான தலைமைத்துவத்தில் நாட்டைக் கொண்டு செல்ல மக்கள் மீண்டும் ஆணை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
குருணாகல் மாவட்டத்தின் விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
குருணாகல் மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களிலும் கட்டடங்கள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளன. ‘ அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை ‘ வேலைத்திட்டம் மூலம் பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. 3 – 4 வருடங்களுக்கு இடையில் இவ்வாறு பல வேலைத்திட்டங்களை எம்மால் செய்ய முடிந்துள்ளது. ஆனால் இவற்றுக்கு நாம் ஒரு போதும் பிரசாரங்களைச் செய்யவில்லை. அதற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யவும் இல்லை.
இந்த வேலைத்திட்டங்களை நாம் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு மக்கள் ஆதரவு வழங்க வேண்டும். அன்று அரசியல்வாதிகளின் தேவைக்கேற்ப அதிபர்களும் ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டார்கள். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கேற்ப தற்போது அந்த கலாசாரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அத்தோடு மாவட்ட அதிபர் மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் வழங்கப்பட்டன. இவை அனைத்துமே பிரதமரின் ஆலோசனைக்கமையவே முன்னெடுக்கப்பட்டன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைப் போன்றதொரு சிறந்த தலைவரை இனியொருபோதும் உருவாக்க முடியாது. இதனை நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
பௌத்த ஆகமத்தை தமது பொய் பிரசாரங்களுக்காக பயன்படுத்திக் கொள்ளும் தலைவர்களுக்கு நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. பிரதமர் ரணில் ஒருபோதும் இவ்வாறு ஆட்சியைக் கைப்பற்ற முயற்சிக்கவில்லை. அவர் அவ்வாறு அதிகாரத்தைக் கைப்பற்ற நினைத்திருந்தால் 2015 ஆம் ஆண்டு அவர் ஜனாதிபதியாக இருந்திருப்பார். எனவே அவர் தொடர்ந்தும் இவ்வாறு சிறப்பான தலைமைத்துவத்தில் நாட்டைக் கொண்டு செல்ல மக்கள் மீண்டும் ஆணை வழங்க வேண்டும் என்றார்.