ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்ற எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அந்த கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக் ஷவை அறிவித்தார். பொதுஜன பெரமுனவின் கன்னி சம்மேளனம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சுகத தாஸ உள்ளக அரங்கில் இடம்பெற்றது. இதன் போதே குறித்த தெரிவுகளும் அறிவிப்புக்களும் இடம்பெற்றன.
உத்தேச ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் குறித்து அறிவிப்புக்களை விடுக்க தயாராகி வருகின்ற நிலையில் பொதுஜன பெரமுனவின் கட்சி சம்மேளனத்தில் கோத்தபாய ராஜபக்ஷவின் பெயர் அறிவிக்கப்பட்டது.
அந்த கட்சியின் தவிசாளரான பேராசிரியர் ஜீ.எல்.பீரீஸ் கட்சியின் தலைமைத்துவ பதவிக்கு மஹிந்த ராஜபக்ஷவின் பெயரை பரிந்துதுரைத்து யோசனையை முன்வைத்தார். அதற்காக அனைத்து உறுப்பினர்களும் ஏகமனதாக அனுமதி வழங்கினார்கள்.
இதன் பின்னர் நீண்ட உரையாற்றிய பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ பிற்பகல் 3.58 மணியளவில் கோத்தபாய ராஜபக்ஷவின் பெயரை வேட்பாளராக அறிவித்தார். அத்தோடு சம்மேளனம் இடம்பெற்ற மேடைக்கு வருகை தந்த கோத்தபாய ராஜபக்ஷ மதத்தலைவர்களை வணங்கி பிரதான மேடைக்குச் சென்று மஹிந்த ராஜபக்ஷவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்.
சுதந்திர கட்சி உறுப்பினர்களும் பங்கேற்பு
கன்னி சம்மேளனத்திற்கு பொதுஜன பெரமுனவில் தற்போது அங்கத்துவம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களும், கூட்டுக் கட்சிகளின் தலைவர்களும் கலந்துக் கொண்டதுடன். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்களான சரத் அமுனுகம, எஸ்.பி . திஸாநாயக்க, டிலான் பெரேரா மற்றும் வடகிழக்கின் முன்னாள் முதலைச்சர் வரதராஜ பெருமாள், விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) உட்பட பொதுஜன பெரமுனவின் உள்ளுராட்சிமன்ற மாகாணசபை உறுப்பினர்கள் பெருமளவான ஆதரவாளர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
ஆதரவாளர்கள் ஆரவாரம்
மஹிந்த ராஜபக்ஷ பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தை ஏற்ற போதும் , கோத்தபாய ராஜபக்ஷ பிரதான மேடைக்கு வருகை தந்த போதும் சம்மேளனத்தில் கலந்து கொண்டிருந்த அனைவரும் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பி ஆரவாரம் செய்தனர். கோத்தபாயவினதும், மஹிந்தவினதும், புகைப்படங்களை ஏந்தி வெற்றி கோஷங்களை எழுப்பினர். அதே போன்ற இடைவிடாது உற்சாக கோஷங்களை எழுப்பி ஆரவாரம் செய்தனர்.
கட்சி சின்னம் கையளிப்பு
பொதுஜன பெரமுனவின் தலைவராக மஹிந்த ராஜபக்ஷவின் பெயரை பரிந்துரைத்த பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், பிரதான மேடைக்கு அழைத்துச் சென்று கட்சி சின்னத்தை அவரிடம் கைளித்தார்.
உறுதி மொழி
தாமரை மொட்டின் வடிவிலான இளஞ்சிவப்பு ஒளி விளக்குகளை ஏந்தி கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ, போஷகர் பசில் ராஜபக்ஷ மற்றும் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரீஸ் உள்ளிட்ட சம்மேளனத்தில் கலந்து கொண்ட அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
” மக்களின் பிரதிநிதியாக தெரிவு செய்யப்படுவர்கள் எந்நிலையிலும் மக்களின் நலன்களை மாத்திரம் கருத்திற் கொண்டு பொறுப்புடன் செயற்பட வேண்டும், முன்னெடுக்கப்படும் அனைத்து செயற்பாடுகளிலும் நாட்டு பற்றும், பொதுஜன பெரமுனவின் பிரத்தியேக கொள்கைகளும் எந்நிலையிலும் முன்னிலைப்படுத்தப்படல் அவசியம்.
கட்சியின் சம்மேளனத்தின் போது அனைத்து தரப்பினரும் ஒரு இலக்கினை நோக்கி பயணிப்பது அவசியாகும். அரசியல் மாற்றங்களின் போதும் கட்சியின் கொள்கையினை ஒருபோதும் விட்டுக் கொடுக்க கூடாது, உத்தேச தேர்தல்களில் வெற்றியினை மாத்திரம் இலக்காக் கொண்டு செயற்படாமல் தாய் நாட்டின் நலன்களையும் கருத்திற் கொண்டு அர்ப்பணிப்புடன் செயற்படுதல் கட்சியின் அனைத்து உறுப்பினர்களின் தார்மீக பொறுப்பாகும். ” என்று அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
தமிழில் பேசிய மஹிந்த
கட்சியின் தலைமைத்துவத்தைப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் நீண்ட உரையாற்றிய மஹிந்த ராஜபக்ஷ தமிழிலும் உரையாற்றினார். வடக்கு , கிழக்கு உள்ளிட்ட இலங்கை வாழ் தமிழ் மக்களிடம் ஆதரவைக் கோரினார்.
பொன்னாடை போர்த்தி கௌரவிப்பு
மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்பட்ட கோத்தபாய ராஜபக்ஷவுக்கும் தமிழ் கலாசரப்படி பொன்னாடை போர்த்தி கௌரவிப்பும் இடம்பெற்றது.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் விசேட உரையினை தொடர்ந்து தேசிய கீதத்துடன் மாலை 4.30 மணியளவில் சம்மேளனம் நிறைவுப் பெற்றது.