மகிந்த அரசாங்கத்தில் மகனை இழந்த தாயின் கண்ணீர் பதிவு!

379 0

இலங்கை அரசாங்கம் நீதி வழங்குவதற்கு தவறிவிட்டது குற்றவாளிகளுடன் இணைந்து செயற்பட்டு அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்கின்றது என மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் கொழும்பில் காணாமல்ஆக்கப்பட்ட 11 இளைஞர்களில் ஒருவரான டிலானின் தாயார் ஜெனீபர் வீரசிங்க குற்றம்சாட்டியுள்ளார்.

பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ச நிறுத்தப்பட்ட அறிவிப்பு வெளியான பின்னர் தனது முகப்புத்தகத்தில் ஜெனீபர் வீரசிங்க இதனை பதிவு செய்துள்ளார்.

இந்த நாட்டின் நீதித்துறை எனக்கும் என்னை போன்ற பிள்ளைகளை இழந்த பெற்றோர்களிற்கும் நீதி வழங்க தவறிவிட்டதால் குற்றவாளிகளை இயற்கை தண்டிக்கும் என்ற ஒரேயொரு நம்பிக்கை மாத்திரம் எஞ்சியுள்ளது

என அவர் பதிவு செய்துள்ளார்.

பதினொரு இளைஞர்களுடன் காணாமல்போன எனது மகனிற்கான கண்ணீர் இன்னமும் வற்றவில்லை என நீதிமன்றத்தின் ஊடாக நீதி கிடைக்கும் என நான் காத்திருந்தேன் அது சாத்தியமாகவில்லை என அவர் தனது முகநூலில் பதிவு செய்துள்ளார்.

யுத்தவீரர்கள் என்ற போர்வையில் நடமாடும் குற்றவாளிகளுடன் சேர்ந்துகொண்டு அரசியல்வாதிகள் போடும் நாடகங்களை நாங்கள் பார்க்கின்றோம், கனத்த இதயத்துடன் நாங்கள் பார்த்தோம் என அவர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் எப்படி தங்கள் பிள்ளைகளுடன் வாழ்க்கையை அனுபவிக்கின்றார்கள் என்பதை பார்த்தோம்,தேசப்பகுதியால் கண்குருடானவர்கள் இவர்கள் செய்த குற்றங்களை ஏற்றுக்கொள்ள மறுத்துவருவதுடன் அவர்களை யுத்தவீரர்கள் என புகழ்வதை பார்த்தோம்.

எங்கள் துயரங்களை தங்கள் நன்மைகளிற்காக பயன்படுத்தியவர்களை பார்த்தோம்,இதேவேளை கடும் சவால்கள் மற்றும் அச்சுறுத்தல்களிற்கு மத்தியில் எங்கள் பிள்ளைகளிற்கு நீதி கிடைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டவர்களை பார்த்தோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.