மதுபானசாலையை அமைக்காதீர்கள் ; கிராம அபிவிருத்தி சங்கம் எதிர்ப்பு

350 0

வவுனியா வைரவபுளியங்குளத்தில் மதுபானசாலையை அமைக்க அனுமதி வழங்காதீர்கள் என வைரவபுளியங்குளம் கிராம அபிவிருத்தி சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வவுனியா பொது மண்டப வீதி சந்தியில் அமைக்கப்படவுள்ள மதுபானசாலைக்கே இவ்வாறு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கிராம அபிவிருத்தி சங்கத்தின் உறுப்பினரொருவர் கருத்து தெரிவிக்கையில்,

வவுனியா புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள மதுபானசாலையொன்றினை இடமாற்றம் செய்யும் நோக்கோடு பொது மண்டப வீதி சந்தியில் குறித்த மதுபானசாலை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

மக்கள் அதிகமாக நடமாடும் பகுதியிலும் ஏற்கனவே மதுபானசாலையொன்று அமைந்துள்ள இடத்தில் இருந்து சுமார் 300 மீற்றர் தூரத்தில் மற்றுமொரு மதுபானசாலையை அமைப்பதற்கு அனுமதிக்க கூடாது என்பதே எமது நோக்கமாகும்.

தற்போது உள்ள மதுபானசாலையை எவ்வாறு அகற்றுவது என்று நாம் சிந்தித்து வரும் நிலையில் புதிதாக இன்னுமொரு மதுபானசாலையை எமது பகுதிக்குள் இடமாற்றம் செய்ய அனுமதிக்க முடியாது என தெரிவித்தார்.

இதேவேளை குறித்த மதுபானசாலையை தமது பகுதிக்குள் இடமாற்றம் செய்ய அனுமதிக்க வேண்டாம் என தெரிவித்து வவுனியா அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளருக்கும் கிராம அபிவிருத்தி சங்கம் கடிதம் அனுப்பி வைத்துள்ளது.