தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க இந்தியா முன்வர வேண்டும் – சாந்தி

268 0

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கான தீர்வினைப் பெற்றுக்கொடுக்க இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் முன்வரவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா அறைக்கூவல் விடுத்துள்ளார்.

முல்லைத்தீவு கல்வி வலயத்துக்குட்பட்ட புதுக்குடியிருப்பு சுதந்திரபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வளாகத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசாவின் 10 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அமைக்கப்பட்ட விளையாட்டு முற்றம் நேற்று (வெள்ளிக்கிழமை) திறந்துவைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 2018ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் தோற்றி பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மூன்று மாணவர்களுடைய கௌரவிப்பு நிகழ்வும் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.

பாடசாலை முதல்வர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வுகளில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் புவனேஸ்வரன் உள்ளிட்ட அதிகாரிகள், ஆசிரியர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி தமிழ் மக்களை சிங்களத் தலைமைகள் இனியும் ஏமாற்ற முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.