தண்டவாள பராமரிப்பு பணிக்காக பாசஞ்சர் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம்!

218 0

மதுரை கோட்ட ரெயில்வேக்கு உட்பட்ட பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு பணி நடந்து வருவதால், வருகிற 31-ந் தேதி வரை பாசஞ்சர் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ரெயில் தண்டவாள பராமரிப்பு பணி நடந்து வருகிறது. இதற்காக ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, காரைக்குடியில் இருந்து திருச்சி செல்லும் பாசஞ்சர் ரெயில் இன்று(சனிக்கிழமை) முதல் இந்த மாதம் முழுவதும் சனிக்கிழமைகளில் மட்டும் ரத்து செய்யப்படுகிறது. அதற்கு பதிலாக சனிக்கிழமைகளில் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் காரைக்குடியில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு மாலை 5.15 மணிக்கு திருச்சி சென்றடையும். மேலும் இந்த ரெயில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை தவிர பிற நாட்களில் வருகிற 30-ந் தேதி வரை சுமார் 1 மணி நேரம் காலதாமதமாக இயக்கப்படும்.

திருச்சி-காரைக்குடி பாசஞ்சர் ரெயில்(வ.எண்.76807/76808) இன்று முதல் 4-ந் தேதி வரையிலும், 10-ந் தேதி, 11-ந் தேதி, 17-ந் தேதி, 18-ந் தேதி, 24, 25-ந் தேதி, 31-ந் தேதி ஆகிய நாட்களில் இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுகிறது.

மதுரை-பழனி பாசஞ்சர் ரெயில்(வ.எண்.56624) 12-ந் தேதி மற்றும் 15-ந் தேதி தவிர வருகிற 31-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. அதற்கு பதிலாக இயக்கப்படும் சிறப்பு ரெயில் மதுரையில் இருந்து காலை 7.15 மணிக்கு புறப்பட்டு காலை 10.15 மணிக்கு பழனி சென்றடையும்.

பாலக்காடு-திருச்செந்தூர் பாசஞ்சர் ரெயில்(வ.எண்.56769/56770) வருகிற 31-ந் தேதி வரை செவ்வாய் மற்றும் வியாழக்கிழமை தவிர பிற நாட்களில் திண்டுக்கல்-நெல்லை இடையே இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுகிறது. வ.எண்.56770 மட்டும் செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மதுரை-நெல்லை ரெயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் மதுரையில் இருந்து சுமார் 2½ மணி நேரம் காலதாமதமாக புறப்பட்டு செல்லும்.

நாகர்கோவில்-கோவை பாசஞ்சர் ரெயில்(வ.எண்.56319/56320) வியாழக்கிழமை தவிர பிற நாட்களில் 19-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை திண்டுக்கல்-நெல்லை ரெயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் வியாழக்கிழமை தவிர வருகிற 18-ந் தேதி வரையிலும், 27-ந் தேதி முதல் 31-ந் தேதி வரையும் இரு மார்க்கங்களிலும் திண்டுக்கல்-விருதுநகர் ரெயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்படுகிறது.

திண்டுக்கல்-மயிலாடுதுறை இணைப்பு பாசஞ்சர் ரெயில் (வ.எண்.56822/56821) வருகிற 12-ந் தேதி, 15-ந் தேதி முதல் வருகிற 23-ந் தேதி வரை இரு மார்க்கங்களிலும் திண்டுக்கல்-திருச்சி ரெயில் நிலையங்களுக்கிடையே ரத்து செய்யப்படுகிறது. நெல்லை-ஈரோடு பாசஞ்சர் ரெயில்(வ.எண். 56826/56825) புதன்கிழமைகள் தவிர, வருகிற 12-ந் தேதி, 15-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை உள்ள நாட்கள் தவிர்த்து வருகிற 31-ந் தேதி வரை சுமார் 2 மணி நேரம் தாமதமாக இரு மார்க்கங்களிலும் இயக்கப்படும்.

திருச்சி-ராமேசுவரம் பாசஞ்சர் ரெயில்(வ.எண்.56829/56830) ஞாயிற்றுக்கிழமைகள், 12-ந் தேதி தவிர வருகிற 6-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை மானாமதுரை-ராமேசுவரம் ரெயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்படுகிறது.

திருச்சி-மானாமதுரை பாசஞ்சர் ரெயில்(வ.எண்.76807) சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமைகள் தவிர வருகிற 30-ந் தேதி வரை திருச்சியில் இருந்து சுமார் 1 மணி நேரம் தாமதமாக காலை 11.05 மணிக்கு புறப்படும். இதனால் மேற்கண்ட நாட்களில் இந்த ரெயிலுக்கு மானாமதுரை ரெயில்நிலையத்தில் இருந்து ராமேசுவரம் செல்ல இணைப்பு ரெயில் வசதி இருக்காது.

மானாமதுரை-திருச்சி பாசஞ்சர் ரெயில்(வ.எண். 76808) சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமைகள் தவிர வருகிற 30-ந் தேதி வரை மானாமதுரையில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்படும்.

ரெயில் போக்குவரத்து மாற்றத்தால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.