உணவு ஒவ்வாமை காரணமாக 24 க்கும் அதிகமான மாணவர்கள் வைத்தியசாலையில்………

302 0

சாய்ந்தமருதில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்களிற்காக வழங்கப்பட்ட உணவு மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

புதன்கிழமை (10) மதியம் கல்முனை கல்வி வலயத்தின் சாய்ந்தமருது கோட்டத்தின் கீழ் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவர்கள் சுமார் 24 க்கும் அதிகமானோர் உணவு ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்பட்டு சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மாணவர்களை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர்.

குறித்த பாடசாலை உணவகத்தில் மாணவர்களிற்கு வழங்கப்பட்ட பகல் உணவு ஒவ்வாமைக்கு காரணம் எனவும் அதை உணவருந்திய வேளை மாணவர்கள் மயக்கமுற்றதாகவும் இவ்வாறு உணவருந்தியவர்களில் சுமார் 24 க்கும் அதிகமான மாணவர்கள் வயிற்று வலி உபாதைக்கு உள்ளாகியதனைத் தொடர்ந்து வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக பாடசாலை அதிபர் தெரிவித்தார்.

இந்நிலையில் குறித்த உணவகம் தற்காலிமாக மூடப்பட்டதுடன் மாணவர்கள் உட்கொண்ட உணவின் பகுதிகளையும் மாதிரிகளையும் பரிசோதனைக்காக சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் எடுத்து சென்றுள்ளனர்.