பெட்ரோல்-டீசல் விலை உயர்வு: ஆம்னி பஸ்-லாரிகள் கட்டணம் உயரும் அபாயம்

378 0

பெட்ரோல்-டீசல் விலை உயர்வு எதிரொலியாக ஆம்னி பஸ், வாடகை லாரி கட்டணங்கள் உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. விலை உயர்வு பிரச்சினையில் விரைவில் முக்கிய முடிவை எடுக்க உள்ளதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.

மத்திய பட்ஜெட்டில் பெட்ரோல்-டீசல் மீது சிறப்பு கூடுதல் உற்பத்தி வரி லிட்டருக்கு ரூ.1 உயர்த்தப்பட்டதன் எதிரொலியாக பெட்ரோல்-டீசல் விலை அதிரடியாக உயர்ந்தது. சென்னையில் கடந்த 5-ந்தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 57 காசும், டீசல் விலை 2 ரூபாய் 58 காசும் விலை அதிகரித்து, ஒரு லிட்டர் பெட்ரோல் 75 ரூபாய் 76 காசுக்கும், டீசல் 70 ரூபாய் 48 காசுக்கும் விற்பனை ஆனது.

நேற்று பெட்ரோல் விலையில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. டீசல் விலை மட்டும் லிட்டருக்கு 6 காசுகள் குறைந்து விற்பனையானது. எனினும் பெட்ரோல்-டீசல் மீதான வரி உயர்வால் அவற்றின் விலை வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக தனியார் பஸ்களில் பயண கட்டணம், லாரி, ஆட்டோ வாடகை கட்டணம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து ஆம்னி பஸ், வாடகை லாரி, ஆட்டோ சங்கங்கள் விரைவில் முக்கிய முடிவை எடுக்க உள்ளன. இதுதொடர்பாக தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் அன்பழகன் கூறியதாவது:-

சுங்க வரி கட்டண உயர்வு, வாகன உதிரிபாகங்கள் விலை உயர்வு போன்ற காரணங்களால் போக்குவரத்து தொழில்கள் கடும் சாவலை எதிர்நோக்கி வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில் பெட்ரோல்-டீசல் மீதான வரி உயர்வு ‘வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது’ போன்று அமைந்துள்ளது.

பெட்ரோல்-டீசல் விலை உயர்வு குறித்து ஆம்னி பஸ், சுற்றுலா பயணிகள் வாகன உரிமையாளர்கள் சம்மேளனத்தின் ஆலோசனை கூட்டம் மும்பையில் வருகிற 25, 26, 27 ஆகிய 3 தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டால் அதற்கு ஏற்றார் போல் ஆம்னி பஸ் கட்டண உயர்வு குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

பெட்ரோல்-டீசல் விலை மீண்டும் உச்சத்துக்கு சென்றால் ஆம்னி பஸ்களில் பயண கட்டணம் 10 சதவீதம் வரை உயர்வதற்கு வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை (வால்டாக்ஸ் ரோடு) பார்சல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரமேஷ்குமார் கூறியதாவது:-

பெட்ரோல்-டீசல் விலை கடந்த ஆண்டு தொடர்ந்து உயர்த்தப்பட்ட போது, நாங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டோம். எனினும் மத்திய அரசு செவி சாய்க்காததால் லாரி வாடகை கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகினோம்.

தற்போது சாலை பராமரிப்புக்காக பெட்ரோல்-டீசல் மீதான வரி உயர்த்தப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்க முடியாது. ஏனென்றால் சாலை பராமரிப்புக்காக கிலோ மீட்டருக்கு 5 ரூபாய் 50 காசு சுங்க வரியாக வசூலிக்கப்படுகிறது.

பெட்ரோல்-டீசல் விலை மேலும் அதிகரித்தால், அனைத்து லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி, வாடகை கட்டணத்தை 10 சதவீதம் வரை உயர்த்துவது குறித்து முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பெட்ரோல்-டீசல் விலை உயர்வு

தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர்கள் சம்மேளனத்தின்(சி.ஐ.டி.யூ.) பொதுச்செயலாளர் சிவாஜி கூறியதாவது:-

கடந்த ஓராண்டில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.12 வரை அதிகரித்துள்ளது. தற்போது பட்ஜெட்டில் வரி உயர்த்தப்பட்டிருப்பதால் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு வழி வகுக்கப்பட்டுள்ளது. எனினும் ஆட்டோவில் முதல் 1.8 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.25-ம், அடுத்தடுத்த கிலோ மீட்டர்களுக்கு 12 ரூபாய் 50 காசும் என்று தமிழக அரசு கடந்த 2013-ம் ஆண்டு நிர்ணயித்த கட்டணமே இன்னும் அமலில் இருக்கிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கருத்தில் கொண்டு முதல் 1.8 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.40-ம், அடுத்தடுத்த கிலோ மீட்டர்களுக்கு ரூ.20-ம் கட்டணமாக தமிழக அரசு நிர்ணயம் செய்ய வேண்டும். இதுதொடர்பாக வருகிற 15-ந்தேதி சென்னையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளோம். இந்த கூட்டத்தில், ஆட்டோக்கள் வேலைநிறுத்தம், சாலைமறியல் போராட்டம் குறித்த அறிவிப்புகள் முன்னெடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னையில் பெரும் பாலான ஆட்டோ டிரைவர்கள் மீட்டர் போட்டு ஆட்டோ ஓட்டுவது இல்லை. அவர்கள் பெட்ரோல் விலை உயர்வை காரணம் காட்டி பொதுமக்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது. ஷேர் ஆட்டோக்களும் கட்டண உயர்வுக்கு திட்டமிட்டுள்ளன.

பெட்ரோல், டீசல் விலை உயரும் போது பஸ், ஆட்டோ, லாரி வாடகை கட்டணத்தை உயர்த்த முடிவு எடுக்கும் சங்கங்கள் அவற்றின் விலை குறையும் போது அதற்கு ஏற்றார் போல் நடவடிக்கை எடுப்பது இல்லை என்ற பொதுவான குற்றச்சாட்டு இருக்கிறது.

எனவே பெட்ரோல்-டீசல் விலை உயர்வை காரணம் காட்டி அத்தியாவசிய பொருட்கள் விலையை மனம் போன போக்கில் உயர்த்தி விட கூடாது என்பதே அனைவரின் எதிர்பார்பாக உள்ளது.