‘மக்களின் வரிப்பணத்தில் போயஸ் கார்டன் வீட்டை ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்ற வேண்டிய அவசியம் என்ன?’ என்று தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான ரூ.913 கோடி மதிப்பிலான சொத்துகளை நிர்வகிக்க ஒரு நிர்வாகியை நியமிக்க வேண்டும் என்று புகழேந்தி என்பவர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
மேலும், ரூ.100 கோடி மதிப்புள்ள போயஸ் கார்டன் இல்லத்தை வெறும் ரூ.32 கோடிக்கு அரசு கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் வளர்ச்சித்துறை செயலாளர், சென்னை மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோருக்கு ஆட்சேபனை கொடுக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், ‘ஜெயலலிதாவின் புகழையும், பெயரையும் நிலைக்க வைக்க பல்வேறு வழிகள் உள்ளதே?. அமைச்சர்களும் தங்களது உரையைத் தொடங்கும் முன்பாக ஜெயலலிதாவை புகழ்ந்துவிட்டுத்தானே பேசுகின்றனர். ஜெயலலிதா இல்லத்தை மக்களின் வரிப்பணத்தில் நினைவு இல்லமாக மாற்ற வேண்டியதன் அவசியம் என்ன?. அப்படியென்றால் ஜெயலலிதா வசித்தார் என்பதற்காக கோடநாடு இல்லத்தையும் நினைவு இல்லமாக மாற்றுவீர்களா? என்று சரமாரியாக கேள்வி கேட்டனர். பின்னர், விசாரணையை வருகிற 22-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

