சீனாவில் மனைவியை கொன்று 106 நாட்களாக ப்ரீசரில் மறைத்து வைத்திருந்த நபருக்கு ஷாங்காய் கோர்ட் மரண தண்டனை வழங்கியுள்ளது.
சீனாவின் ஹாங்கோ பகுதியைச் சேர்ந்தவர் ஜூ சியாடோங்(30). இவர் ஒரு துணிக்கடையில் பணியாற்றி வந்துள்ளார். இவரது மனைவி யாங் லிப்பிங்(30). இவர் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
ஜூ-யாங் இருவருக்கும் திருமணம் ஆனதில் இருந்தே சிறுசிறு சண்டைகள் வந்துள்ளன. கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் மாதம் இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் நடந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த ஜூ, யாங்கின் கழுத்தை நெறித்து கொன்றுவிட்டார். பின்னர் இதனை மறைக்க வேண்டும் என்பதற்காக யாங்கின் உடலை வீட்டிலேயே வைக்க ப்ரீசர் ஒன்றை ஆன்லைனில் வாங்கியுள்ளார்.
இப்போது ஏன் அவசரமாக அதிக விலை கொடுத்து ப்ரீசர் வாங்குகிறாய் என அருகில் வசித்தவர்கள் கேட்டபோது, ‘செல்லமாக வளர்க்கும் பாம்புகள், பல்லிகள், தவளைகளுக்கு உணவு சேமிப்பதற்காக வாங்கியுள்ளேன்’ என பதில் கூறியுள்ளார்.
இத்தனை டிரிக்கினை செய்துவிட்டு சுதந்திரமாக சுற்றித்திரிந்த ஜூ, யாங்கின் தாய் பிறந்தநாள் விழாவிற்காக அழைப்பு விடுத்துள்ளார். செய்வதறியாது திகைத்த ஜு பயத்தில், உண்மையை கூறிவிட்டு போலீசாரிடம் சரண் அடைந்தார்.
போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஷாங்காய் கோர்ட்டிற்கு இந்த வழக்கு வந்தது. இதில் ஜூவிற்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து ஜூ மேல்முறையீடு செய்தார்.
இந்த மேல் முறையீட்டை ஏற்று கோர்ட் விசாரித்து வந்தது. இந்நிலையில் இன்று விசாரணைக்கு வந்த வழக்கை விசாரித்த ஷாங்காய் கோர்ட், ஜூங்கிற்கு வழங்கப்பட்ட மரண தண்டனையில் எந்த மாற்றமும் இல்லை என தீர்ப்பு வழங்கியுள்ளது.

