பறவை தன் குஞ்சுக்கு உணவு வழங்கும் புகைப்படம் -உலகையே உலுக்கியது ஏன்?

322 0

அமெரிக்காவில் பறவை ஒன்று தனது குஞ்சுக்கு உணவு வழங்கிய புகைப்படம் பார்ப்பவர்களை உறைய வைத்துள்ளது. இதற்கான காரணம் என்ன என்பதை பார்ப்போம்.

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தின் கடற்கரையில் பறவைகள் பல அழகாக பறந்துக் கொண்டிருப்பது வழக்கம்.  இதனை அழகாக புகைப்படம் எடுக்க கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று  கரேன் மேசன் எனும் புகைப்பட கலைஞர் சென்றிருந்தார்.

வரிசையாக பல பறவைகளின் அசைவுகளை வித்தியாசமாக படம் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது பிளாக் ஸ்கிம்மர் எனும் பறவை தனது குஞ்சிடம் நெருங்கி வந்துக் கொண்டிருந்தது.

அந்த பறவையின் வாயில் உணவு இருந்துள்ளது. குஞ்சியிடம் அதனை கொடுக்கும்போடு புகைப்படம் எடுக்க வேண்டும் என கரேன் நினைத்தார். அருகில் வரவர கேமராவை ரெடியாக வைத்துக் கொண்டு சரியான தருணத்திற்காக காத்திருந்தார்.

தாய் பறவை உணவை கொடுக்கவே சரியாக படம் பிடித்தார். பின்னர் அந்த உணவை வாங்கிக் கொண்ட குஞ்சு, கரேனின் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்ததுபோல் ஒரு நிகழ்வையும் படம் பிடித்தார்.
தாய் கொடுத்த உணவுடன் குஞ்சு

இந்த புகைப்படம் ஏன் அனைவரையும் உலுக்க வேண்டும்? அனைவரின் மனதையும் ஏன் புண்படுத்த வேண்டும்? இதற்கான காரணம்,  அந்த தாய் பறவை தனது குஞ்சுக்கு கொடுத்தது மீதம் விடப்பட்ட சிகரெட் துண்டு.

புகைப்படத்தை கரேன் திரும்ப பார்த்தபோதுதான் எங்கோ, யாரோ பாதி தீயை அணைத்து கீழே போட்ட  சிகரெட் துண்டு என தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து கரேன் தனது பேஸ்புக் பக்கத்தில், ‘இதுபோன்று அலட்சியமாக சிலர் செய்யும் செயல்கள் பறவைகள், விலங்குகளின் வாழ்க்கையை பெரிதும் பாதிக்கின்றன. இப்படி யாரும் இனி தயவு செய்து செய்யாதீர்கள்’ என உருக்கமாக கூறி புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் இந்த புகைப்படங்களை கனத்த மனதோடு பார்த்து பகிர்ந்து வருகின்றனர்.