கல்முனை வடக்கு தமிழ்ப் பிரதேச செயலய பிரச்சினைக்கு குரல்கொடுத்ததுபோல, தமிழர்களின் ஏனையப் பிரச்சினைகளையும் தீர்க்க பௌத்த மதகுருமார் முன்வர வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், “ கல்முனை வடக்கு தமிழ்ப் பிரதேச செயலயக பிரச்சினைக்கு அனைவரும் குரல் கொடுத்தனர். சிறுபான்மை மக்களுக்கு உதவிபுரியும் நோக்கில் பெளத்த மதகுருமாரும் அந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.
சிறுபான்மையினத்தவர்களாக இருந்தாலும் அவர்களின் கோரிக்கை நியாயமானது என்பதற்காக அதனை ஏற்றுக்கொண்டார்களென்பது திருப்திகரமான ஒரு விடயமாகும்.
அதேபோல தமிழர்களின் ஏனையப் பிரச்சினைகளையும் தீர்க்க பௌத்த பௌத்த மதகுருமார் முன்வர வேண்டும்.
இந்த பிரச்சினைகள் தீர்க்கப்படாமைக்கு ஒரு காலத்தில் பௌத்த குருமாரே காரணமாகவிருந்தனர். எனவே நாட்டில் இனப்பிரச்சினை இருக்கக்கூடாது என அவர்கள் உண்மையாகவே எண்ணுவார்களாகவிருந்தால், தமிழர்களின் ஏனையப் பிரச்சினைகளையும் தீர்க்க அவர்கள் முன்வர வேண்டும்” என மேலும் தெரிவித்தார்.