அனைத்து தரப்பினர்களும் இணைந்து செயற்படுங்கள் – ஐ.நா.மனித உரிமை ஆணையாளர்

410 0

இலங்­கையில்  இரண்டு மாதங்­க­ளுக்கு முன்னர் இடம்­பெற்ற  பயங்­க­ர­வாத தாக்­குதல் குறித்து   கவனம் செலுத்­தி­யி­ருக்­கின்றேன்.  எனினும்  அதன்­ பின்னர்   முஸ்லிம் மக்கள் மீதான தாக்­கு­தல்கள் மற்றும்  சில மதத்­த­லை­வர்­களின்  வன்­மு­றை­களை அங்­கீ­க­ரிக்கும் வகை­யி­லான  கருத்­துக்கள் தொடர்­பி­லான   அறிக்­கைகள்    கவ­லையை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றன என்று ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர்    மிச்செல்  பச்லெட்  தெரி­வித்தார்.

பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ராக சில­ந­ட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.  ஆனால்  அவ­ச­ர­கால சட்­ட­மா­னது மிகவும்  குறை­வான காலப்­ப­கு­திக்கு மட்­டுமே    அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும் என்றும்  ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் மிச்செல் பச்லெட்  குறிப்­பிட்­டி­ருக்­கின்றார்.

ஜெனி­வாவில் நேற்று ஆரம்­ப­மான   ஐ.நா. மனித உரிமை பேர­வையின்  41 ஆவது கூட்டத் தொடரை ஆரம்­பித்து  வைத்து  உரை­யாற்­று­கை­யி­லேயே    ஆணை­யாளர்  மிச்செல் பச்லெட் இதனைக் குறிப்­பிட்டார்.

நீண்ட அறிக்­கையை  நேற்று   பேர­வையில் வாசித்த   மனித உரிமை ஆணை­யாளர் பல்­வேறு நாடுகள் குறித்து பிரஸ்­தா­பித்­த­துடன் இலங்கை குறித்தும் தனது  நிலைப்­பாட்டை வெ ளியிட்டார்.

அவர் அங்கு இலங்கை தொடர்பில் மேலும்  குறிப்­பி­டு­கையில்,

இலங்­கையில் இரண்டு  மாதங்­க­ளுக்கு முன்னர்  இடம்­பெற்ற   பயங்­க­ர­வாத தாக்­கு­தல்கள்  அந்த நாட்டில்  பதற்­றத்தை  அதி­க­ரித்­தமை தொடர்பில்    நான்  கவனம் செலுத்­தி­யி­ருக்­கின்றேன்.

ஜனா­தி­ப­திக்கும் அர­சாங்­கத்­திற்­கு­மி­டை­யி­லான ஒன்­றி­ணைந்த அணு­கு­மு­றையின்  பல­வீ­ன­மான தன்­மையே  பாது­காப்புத் தரப்­பினர்  அனைத்துப் பிர­ஜை­க­ளுக்கும் பாது­காப்பை வழங்கும் செயற்­பாட்டில்   பாரிய தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.  குறிப்­பாக   சில  முக்­கிய  மனித உரிமை விட­யங்­களில்  இவ்­வாறு  மோச­மான பாதிப்பு  ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.

எப்­ப­டி­யி­ருப்­பினும்  முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ரான தாக்­கு­தல்கள்   மற்றும்   சில  மதத்­த­லை­வர்­களின் வன்­மு­றை­களை  ஊக்­கு­விக்கும் கருத்­துக்கள் என்­பன என்னை கவ­லை­கொள்ளச் செய்­தி­ருக்­கின்­றன.  இந்த  விடயம் சரி­யான முறையில்  கையா­ளப்­ப­ட­வேண்டும்.

பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ராக சில­ந­ட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். ஆனால் அவ­ச­ர­கால சட்­ட­மா­னது மிகவும்  குறை­வான காலப்­ப­கு­திக்கே   அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும்.

அத்­துடன்   அர­சியல், மதத்­த­லை­வர்­க­ளையும் சமூ­கத்­த­லை­வர்­க­ளையும் ஒன்­றி­ணைத்து  வன்­மு­றைகள் மற்றும் அநீ­திகள் கார­ண­மாக  ஏற்­பட்­டுள்ள   நிலை­மை­களை   ஆராய்­வதே   இங்கு மிகவும் முக்­கி­ய­மா­ன­தாக   காணப்­ப­டு­கின்­றது.

அனைத்­து­வ­கை­யான வன்­மு­றைகள் மற்றும் அநீ­திகள் தொடர்பில்  அர­சியல், மத மற்றும் சமூகத் தலைவர்கள்  ஒன்றிணைந்து ஆராயவேண்டியது அவசியமாகும்.

இந்த  விடயத்தில்   இலங்கை  மனித உரிமை ஆணைக்குழு முன்னெடுக்கும் மிக முக்கிய மற்றும்   ஊக்குவிக்கத் தக்க வகையிலான வேலைத்திட்டங்களுக்கு எனது  முழு ஒத்துழைப்பும்  வழங்கப்படும்  என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.