இஸ்லாமிய அடிப்படைவாதத்தை முழுமையாக இல்லாதொழிக்க வேண்டுமாயின் தமிழ், சிங்கள மக்கள் அரசியல் வேறுப்பாடுகளை துறந்து  ஒன்றுப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர், முஸ்லிம் மக்களும் இலங்கையர் என்ற நிலையில் இருந்து செயற்பட வேண்டும் என்பதே பிரதான எதிர்பார்ப்பு. ஆனால்  நடைமுறையில் இவர்கள் அந்நிய நாட்டு கலாச்சாரங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள் எனவும் குறிப்பிட்டார்.

அத்துடன் மத்ரஸா பாடசாலைகளில் முழுமையாக பிற மதங்களின் மீதான வெறுப்புணர்வும் அடிப்படைவாதமுமே போதிக்கப்படுகின்றன. தற்போது  இவ்வாறான பாடசாலைகளில் கல்வி கற்கும் 35 ஆயிரம் மாணவர்கள் ஒரு காலத்தில் அடிப்படைவாதிகளாக தோற்றம் பெற வாய்ப்புண்டு இதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.

நாட்டில் இன்று இஸ்லாமிய அடிப்படைவாதம் ஒரு புறமும்,  வல்லரசு நாடுகளின் ஆக்கிரமிப்புக்கள் ஒப்பந்த ரீதியில்  இடம் பெறுவது மறுபுறமும் இடம்பெறுகின்றன. இவ்விரு செயற்பாடுகளுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின்  தான்தோன்றித்தனமாக பொருளாதார கொள்கைகளும்,  பொருத்தமற்ற அரசியல் கொள்கைகளும் மூல காரணியாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை மன்றக்கல்லூரியில் இன்று இடம்பெற்ற திருகோணமலை துறைமுகத்தை அமெரிக்காவிற்கும் விற்கும் சோபா  ஒப்பந்தத்தை    இல்லாதொழிப்போம் என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.