முதுகலை கணினி ஆசிரியர் தேர்வு தமிழகம் முழுவதும் 119 மையங்களில் நேற்று நடந்தது. 814 இடங்களுக்கு 30 ஆயிரத்து 833 பேர் போட்டியிடுகிறார்கள்.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம், காலியாக உள்ள 814 முதுகலை கணினி ஆசிரியர்(கிரேடு-1) பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மார்ச் மாதம் 1-ந்தேதி அறிவித்தது.
இதுவரையில் நேர்முக தேர்வு மூலம் கணினி ஆசிரியர்கள் பணி இடங்கள் நிரப்பப்பட்டு வந்தன. இந்த ஆண்டு முதல் முறையாக முதுகலை கணினி ஆசிரியர் பணி இடங்களுக்கு ‘ஆன்-லைன்’ முறையில் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. ஜூன் 23-ந்தேதி (நேற்று) தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த தேர்வுக்கு 7 ஆயிரத்து 546 ஆண்கள், 23 ஆயிரத்து 287 பெண்கள் என 30 ஆயிரத்து 833 பேர் விண்ணப்பித்து இருந்தனர். தேர்வு எழுதுவதற்கான ‘ஹால்-டிக்கெட்’ கடந்த 17-ந்தேதி ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தமிழகம் முழுவதும் 119 மையங்களில் முதுகலை கணினி ஆசிரியர் தேர்வு நேற்று நடந்தது. காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தேர்வு நடைபெற்றது. ‘ஹால்-டிக்கெட்’, அடையாள அட்டை சரிபார்க்கப்பட்டு தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
தேர்வு எழுதிய சங்கீதா, சாந்தி ஆகியோர் கூறியதாவது:-
தேர்வு சற்று எளிதாகவே இருந்தது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் பாடத்திட்டத்தில் இருந்தே வினாக்கள் கேட்கப்பட்டு இருந்தன. 10 கேள்விகளுக்கு அளிக்கப்பட்டிருந்த 2 விடைகளும் சரியானது போலவே இருந்தது. மிகவும் புத்திக்கூர்மையுடன் அந்த கேள்வியை அணுக வேண்டியது இருந்தது. நன்கு படித்தவர்களுக்கு தேர்வு முடிவு நிச்சயம் சாதகமாக அமையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
முதுகலை கணினி ஆசிரியர் தேர்வு முதல் முறையாக ‘ஆன்-லைன்’ மூலம் நடைபெற்றாலும், கணினி ஆசிரியர் பதவி உயர்வு தேர்வு ஏற்கனவே ‘ஆன்-லைன்’ முறையில் தான் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
பாதிக்கப்பட்ட மையங்களில் மீண்டும் தேர்வு நடத்த ஏற்பாடு
தமிழகம் முழுவதும் ஆன்-லைன் மூலம் நேற்று முதுகலை கணினி ஆசிரியர் தேர்வு நடந்தது. இந்த தேர்வின்போது கும்பகோணம் தனியார் கல்லூரி உள்ளிட்ட சில மையங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் அந்த மையங்களில் தேர்வு எழுத வந்தவர்கள் தேர்வு எழுத முடியவில்லை.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் திடீரென ஆர்ப்பாட்டம், சாலைமறியல் என போராட்டத்தில் குதித்தனர். தேர்வர்களின் போராட்டத்துக்கு பின்னர் பாதிக்கப்பட்ட தேர்வு மையங்களில் மீண்டும் தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்படும் என தேர்வு வாரியம் அறிவித்தது.
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பெரும்பாலான மையங்களில் எந்தவித இடர்பாடும் இன்றி தேர்வு நடைபெற்றது. ஒரு சில மையங்களில் ஓரிரு ஆய்வகத்தில் கணினி தொழில்நுட்ப கோளாறு காரணங்களால் சில தேர்வர்கள் தேர்வு எழுத இயலாத நிலை ஏற்பட்டது. அவர்களுக்கும், தேர்வை முழுமையாக நிறைவு செய்யாதவர்களுக்கும் வேறு ஒரு நாளில் தேர்வு நடத்தப்படும் என தேர்வு வாரியம் தெரிவித்து கொள்கிறது.
எனவே தேர்வர்கள் எக்காரணத்தை கொண்டும் அச்சப்பட தேவையில்லை. தேர்வு நடைபெறும் நாள் மற்றும் மையங்கள் சார்ந்த விவரங்கள் தேர்வர்களுக்கு எஸ்.எம்.எஸ்., இ-மெயில் மூலம் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் விரைவில் வழங்கப்படும்.
ஒதுக்கீடு செய்யப்படும் தேர்வு மைய விவரங்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

