* விக்னேஸ்வரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியே கொண்டு வருவதில், அவரை மாற்று அரசியல் தலைமையாக வெளிப்படுத்துவதில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு இருக்கும் பங்கைப் போலவே, ஈ.பி.ஆர்.எல்.எவ்.வுக்கும் கணிசமான பங்கு உள்ளது.
*ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் முரண்பட்டுக் கொண்டு வெளியேறி வந்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து செயற்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எவ், அங்கிருந்தும் காய்வெட்டிக் கொண்டு, ஆனந்த சங்கரியின் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் சேர்ந்து உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்டிருந்தது.
உள்ளூராட்சித் தேர்தலில் அந்தக் கூட்டணி தோல்வியைச் சந்தித்த நிலையில், விக்னேஸ்வரனையும் விட்டால், வேறு கதியில்லை என்ற கட்டத்தில், தமிழ் மக்கள் கூட்டணியுடன் இணைந்தது.
“நாங்கள் ஒன்று சேர்ந்தால் சாதிக்க முடியாதது ஒன்றில்லை”- கடந்த 15ஆம் திகதி கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடந்த சட்டத்தரணி க.மு.தர்மராசாவின் நினைவு நிகழ்வில் உரையாற்றிய போது, கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை நோக்கி, தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் விடுத்திருந்த அழைப்பே இது.
தமிழ் மக்கள் பேரவையின் அண்மைய செயற்குழுக் கூட்டத்திலும், கொழும்பில் நடந்த இந்தக் கூட்டத்திலும், உரையாற்றிய சி.வி.விக்னேஸ்வரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் கூட்டணி வைப்பதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
தமிழ் மக்கள் பேரவையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் அங்கம் வகிக்கிறது. ஆனால், அதன் கூட்டங்களை அண்மைக்காலமாக புறக்கணித்து வருகிறது.
எனவே, விக்னேஸ்வரன் பேரவையில் அழைப்பை விடுத்தபோது, கஜேந்திரகுமார் பொன்னம்பலமோ அல்லது அவரது கட்சியினரோ அங்கிருக்கவில்லை.
ஆனால், கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் அவர் உரையாற்றிய போது, மேடையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் இருந்தார். விக்னேஸ்வரனின் அழைப்புக்குப் பதிலளிக்கும் வகையில் அவர் கருத்துக்களையும் வெளியிட்டிருந்தார்.
ஆனாலும், ஊடகங்களில் விக்னேஸ்வரனின் கருத்துக்களே பெரும்பாலும் வெளியாகியிருந்தன. கஜேந்திரகுமாரின் கருத்துக்களை ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை என்பது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வருத்தம்.
அதனை அடுத்தடுத்த நாட்களில், யாழ்ப்பாணத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், அந்தக் கட்சியின் செயலாளர் கஜேந்திரன் வெளிப்படுத்தியிருந்தார்.
ஒத்த கொள்கையுடைய, கொள்கைப்பற்றுள்ள கட்சிகள் இணைந்து செயற்படுவது முக்கியமானது என்பதை, விக்னேஸ்வரன் வெளியிட்டிருக்கிறார். அதனை கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் ஏற்றுக் கொள்ளும் நிலையில் தான் இருக்கிறார்.
இருந்தாலும், இவர்களின் இணைவுக்குத் தடையாக இருப்பது, விக்னேஸ்வரனுக்குப் பின்னர் இருக்கின்ற தரப்புகள் தான் என்பதை கஜேந்திரகுமார் வெளிப்படுத்தியிருக்கிறார்.
விக்னேஸ்வரனையும், அவரது தமிழ் மக்கள் கூட்டணியையும் ஏற்றுக் கொள்ளவும், அதனுடன் கூட்டு வைக்கவும், கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தயாராகவே இருக்கிறது.
முன்னதாக, தனியான கட்சியை விக்னேஸ்வரன் ஆரம்பித்ததை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விரும்பவில்லை. அதனை ஒரு போட்டிக் கட்சியாகவே- தமக்கான அச்சுறுத்தலாகவே, கஜேந்திரகுமார் தரப்பு கருதியது.
எனினும், விக்னேஸ்வரன் கட்சி ஆரம்பிக்கப்பட்டு எட்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில், அதன் செயற்பாடுகள் பெரியளவில், மக்களைச் சென்றடையவில்லை. அந்தக் கட்சி எந்தளவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெறும் என்ற நிச்சயமற்ற நிலையே காணப்படுகிறது.
தமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சி வெறுமனே விக்னேஸ்வரன் என்ற பிரபலத்தை நம்பி மாத்திரமே தொடங்கப்பட்டுள்ளது. அவரைப் புறந்தள்ளிப் பார்த்தால், அது பலத்துடன் நிலைபெறக் கூடிய சாத்தியங்கள் அரிதாகவே தெரிகின்றன.
இது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆறுதல் அளிக்கின்ற விடயம். தமக்கு – தமது எதிர்கால அரசியலுக்கு தமிழ் மக்கள் கூட்டணியினால் சவால் ஏற்படாது என்பதை, கஜேந்திரகுமார் தரப்பு இப்போது உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறது.
இந்தநிலையில், விக்னேஸ்வரன் என்ற ஆளுமை மற்றும் அவருக்கு இருக்கின்ற பெயர் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அவருடன் கூட்டணி வைத்துக் கொள்ளவும், அவருடன் இணைந்து செயற்படவும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தயாராகவே இருக்கிறது.
ஆனாலும், இரண்டு தரப்புகளும் இணைந்து செயற்படுவதற்கு தடையாக இருப்பது, ஈ.பி.ஆர்.எல்.எவ் போன்ற தரப்புகளே.
விக்னேஸ்வரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியே கொண்டு வருவதில், அவரை மாற்று அரசியல் தலைமையாக வெளிப்படுத்துவதில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு இருக்கும் பங்கைப் போலவே, ஈ.பி.ஆர்.எல்.எவ்.வுக்கும் கணிசமான பங்கு உள்ளது.
விக்னேஸ்வரன் தனிக் கட்சியை ஆரம்பிக்க முடிவு செய்தபோது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அவரிடமிருந்து ஒதுங்க முடிவு செய்தது. ஆனால், ஈ.பி.ஆர்.எல்.எவ் தான், விக்னேஸ்வரனுடன் ஒட்டிக் கொண்டிருந்தது.
ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் முரண்பட்டுக் கொண்டு வெளியேறி வந்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து செயற்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எவ், அங்கிருந்தும் காய்வெட்டிக் கொண்டு, ஆனந்த சங்கரியின் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் சேர்ந்து உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்டிருந்தது.
உள்ளூராட்சித் தேர்தலில் அந்தக் கூட்டணி தோல்வியைச் சந்தித்த நிலையில், விக்னேஸ்வரனையும் விட்டால், வேறு கதியில்லை என்ற கட்டத்தில், தமிழ் மக்கள் கூட்டணியுடன் இணைந்தது.
உள்ளூராட்சித் தேர்தலில் தம்மை ஏய்த்து விட்டுப் போன ஈ.பி.ஆர்.எல்.எவ்.வுடன், இணைந்திருக்கும், தமிழ் மக்கள் கூட்டணியுடன் கூட்டு வைத்துக்கொள்ள கஜேந்திரகுமார் தரப்பு தயாராக இல்லை.
விக்னேஸ்வரனும், தாங்களும் இணைந்து செயற்பட முடியும் என்றும், தமிழ் மக்களின் நலனுக்காக பேரம் பேச முடியும் என்றும் கூறியுள்ள கஜேந்திரகுமார், ஆனால் அதனை குழப்பக் கூடிய தரப்புகளை உள்வாங்க முடியாது என்று திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.
தமிழ் அரசியலில் பிரதிநிதிகளாக இருந்து, இந்தியா, மேற்குலகின் எடுபிடிகளாக இருந்து தமிழ் மக்களின் நலன்களைப் பலியிடும் தரப்புகளை இந்தக் கூட்டணிக்குள் சேர்த்துக் கொண்டு தோல்வியடையக் கூடாது என்று கஜேந்திரன் கூறியிருக்கிறார்.
இங்கு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கூறவருகின்ற விடயம். தனியே ஈ.பி.ஆர்.எல்.எவ்.வுக்கு மாத்திரம் பொருத்தமுடையதன்று. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகினால், மாற்று அணியில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்ற கட்சிகளுக்கும் கூட இதற்குள் ஒரு செய்தி இருக்கிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள், இப்போதும் கூட முழுமையான ஒற்றுமை இருக்கிறது என்றில்லை. ரெலோ அவ்வப்போது போர்க்கொடி எழுப்பும். வெளியே போகப்போவது போல பாவனை காட்டி அச்சுறுத்தும். புளொட் கூட வெளியேறப் போவதாக முன்னர் தகவல்கள் வெளியாகின.
விக்னேஸ்வரன் தலைமையிலான பலமான மாற்று அணி ஒன்று உருவானால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு, தமிழரசுக் கட்சியின் பங்காளிகள் விலகிச் சென்று விடும் அபாயம் முன்னர் இருந்தது.
ஆனால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாடு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றான- தமிழ்த் தேசிய அரசியல் நிலைப்பாடு கொண்ட கட்சிகளின் பரந்துபட்ட கூட்டணி ஒன்று உருவாவதற்கான சாத்தியங்களை அருகிப் போகச் செய்திருக்கிறது.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அண்மைய ஒரு செய்தியாளர் சந்திப்பில், தம்மைத் தவிர மற்றெல்லா கட்சிகளையும், இந்தியாவினதோ, இலங்கை அரசினதோ முகவர்கள் என்றே கூறியிருந்தார்.
கஜேந்திரன் கடந்தவாரம் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், ஏற்கனவே தமிழரசியல் பிரதிநிதிகளாக இருந்த- மேற்குலக இந்திய எடுபிடிகளாக இருந்து, தமிழ் மக்களின் நலன்களை பலியிட்டவர்களை சேர்த்துக் கொண்டு பயணிக்க தயாரில்லை என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இவர்கள் தமது அரசியல் பயணத்தை பலவீனப்படுத்துவார்கள் என்றும், குழப்பத்தை ஏற்படுத்துவார்கள் என்றும் அவர்கள் கருதுகிறார்கள் என்பதை விட, அவ்வாறான ஒரு கூட்டில், தாம் தனித்து விடப்படும் நிலை ஏற்படும், பலவீனப்படுத்தப்படும் நிலை ஏற்படும் என்ற அச்சமே அவர்களிடம் அதிகமாக உள்ளது.
தமிழ் மக்கள் கூட்டணியுடன் சேரும் போது சம பங்காளித்துவம் கிடைக்கும். இன்னும் கட்சிகளை சேர்க்கும் போது, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பலம் குறையும் என்று அந்தக் கட்சி கருதுவதாக தெரிகிறது.
விக்னேஸ்வரனைப் பொறுத்தவரையில், தன்னை நம்பி வந்து விட்ட ஈ.பி.ஆர்.எல்.எவ்.வையோ ஏனைய தரப்புகளையோ ஒதுக்கித் தள்ளி விட்டு, கஜேந்திரகுமாருடன் கூட்டுச் சேர்வதற்குத் தயாராக இருக்கிறாரா என்று தெரியவில்லை.
ஆனால், இரண்டு கட்சிகளும் சேர்ந்து செயற்பட வேண்டும் என்ற விருப்பம் அவருக்கு இருக்கிறது. இல்லையேல் தாம் அரசியலில் காணாமல் போய் விடும் அபாயம் இருப்பதை அவர் உணருகிறார் போலும்.
க.மு. தர்மராஜா இருந்திருந்தால், இந்தக் கூட்டை உருவாக்க அழுத்தம் கொடுத்திருப்பார் என்று விக்னேஸ்வரன் குறிப்பிட்டிருப்பதானது, இரண்டு தரப்புகளையும் இணைத்து வைக்கும் வேலையைச் செய்யக்கூடிய, ஆளுமை கொண்ட தரப்பு ஒன்று, அவர்கள் மத்தியில் இல்லை என்பதை வெளிப்படுத்துகிறது.
விக்னேஸ்வரன்- கஜேந்திரகுமார் கூட்டு அரசியலில் சாத்தியப்படுமா என்பதை- இரண்டு கட்சிகளினதும் கொள்கைகளோ, தலைமைகளோ, தமிழ் மக்களின் நலன்களோ மாத்திரம் தீர்மானிக்கவில்லை.
அதற்கு அப்பாலுள்ள புறச் சக்திகளே இந்த விடயத்தில் தீர்மானத்தை எடுக்கின்ற தரப்புகளாக இருக்கின்றன என்பதைத் தான், இந்த இடைவெளியில் இருந்து புரிந்து கொள்ளமுடிகிறது.