தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவிற்கு வந்தால் வரவேற்போம்- அமைச்சர் ஜெயக்குமார்

463 0

தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவிற்கு வந்தால் வரவேற்போம், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தாரை தவிர வேறு யார் வந்தாலும் வரவேற்போம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

சென்னை புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயிலில் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இதையடுத்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
யாகம் நடத்தினால் மழை பொழியும் என்பது நம்பிக்கை, ஆதலால் தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கோயில்களில் யாகம் நடத்தப்படுகிறது. மழைநீர் சேகரிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை மக்கள் தற்போது உணர்ந்திருப்பர். ஒவ்வொருவரும் ஒரு மரம் நட்டால் அது 10 பேருக்கு ஆக்சிஜன் தரும், இயற்கை வளங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது நமது கடமை.
தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவிற்கு வந்தால் வரவேற்போம். சசிகலா மற்றும் அவரது குடும்பத்தாரை தவிர வேறு யார் அதிமுகவிற்கு வந்தாலும் வரவேற்போம். ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை கொள்கை அடிப்படையில் அதிமுக ஆதரவு அளிக்கிறது, நடைமுறை சிக்கல்களை தீர்த்த பிறகு அதனை அமல்படுத்துவது குறித்து ஆலோசனை செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.