மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கான இரகசிய நடவடிக்கைகள் முன்னெடுப்பு

313 0

பல வருடங்களிற்கு பின்னர் மரணதண்டனை கைதியொருவரிற்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான  நடவடிக்கைகள் இரகசியமாக முன்னெடுக்கப்படுவதாக கொழும்பு டெலிகிராவ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தான் கடுமையானவர் என  காண்பிப்பதற்காக பல வருடங்களிற்கு பின்னர் மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்  என தெரிவித்துள்ள கொழும்பு டெலிகிராவ் ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடும் கைவிடாத சிறிசேன மக்கள் மத்தியில் தனது செல்வாக்கை உயர்த்துவதற்காக இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளது.

மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளில்  சட்டமா அதிபர் திணைக்களமும் சிறைச்சாலைகள் திணைக்களமும் ஈடுபட்டுள்ளதாகவும் கொழும்புடெலிகிராவ் தெரிவித்துள்ளது.

அடுத்தவாரமளவில் மரணதண்டனை நிறைவேற்றப்படலாம்,ஜனாதிபதி  செயலணியால் அறிவிக்கப்பட்டுள்ள போதைபொருள் ஒழிப்பு வாரத்தில ஜனாதிபதி மரணதண்டனையை நிறைவேற்ற விரும்புகின்றார் எனவும் கொழும்பு டெலிகிராவ் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பான சட்டமுறைகள்  மற்றும் சர்வதேச அளவில் எழக்கூடிய அழுத்தங்களை கையாள்வது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் கவனம் செலுத்தி வருகின்றதுஎனவும் கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது.

மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கான முயற்சிகள் இடம்பெறுவதை இரு அமைச்சர்கள் உறுதி செய்துள்ளனர் என கொழும்புடெலிகிராவ் தெரிவித்துள்ளது.மரண தண்டனையை நிறைவேற்றும் முயற்சிகள் குறித்து தெரியவந்தால் எழக்கூடிய சர்வதேச அழுத்தங்களை தவிர்ப்பதற்காக இரகசியமாக இதனை முன்னெடுக்க விரும்புவதாக சிறிசேன தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்துள்ளார் எனவும் கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது.