மும்பை விமான நிலையத்தில் ரூ.10½ கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்

272 0

மும்பை விமான நிலைய பார்சல் பிரிவில் ரூ.10 கோடியே 56 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

மும்பை விமான நிலையத்தில் உள்ள பார்சல் பிரிவில் இருந்து தங்கம் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அதிகாரிகள் நேற்று முன்தினம் பார்சல் பிரிவிற்கு சென்று அதிரடி சோதனை செய்தனர்.

இந்த சோதனையின் போது ஐதராபாத், கோவை, கொல்கத்தா, சென்னை போன்ற இடங்களில் இருந்து வந்த பார்சல்களை பிரித்து பார்த்தனர்.

இதில், அந்த பார்சல்களில் இருந்த பொருட்களுக்கு இடையே தங்கக் கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அந்த தங்கக்கட்டிகளை அதிரடியாக பறிமுதல் செய்தனர். அந்த தங்கக் கட்டிகள் மொத்தம் 32 கிலோ எடை கொண்டதாக இருந்தது. இவற்றின் மதிப்பு ரூ.10 கோடியே 56 லட்சம் ஆகும்.

பார்சல்களில் மறைத்து தங்கம் கடத்தலில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். விமான நிலைய பார்சல் பிரிவில் ரூ.10½ கோடி தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.