சென்னை மாதவரத்தில் என்கவுண்ட்டரில் ரவுடி சுட்டுக்கொலை!

952 0

சென்னை மாதவரத்தில் போலீஸ்காரர்களை தாக்கிய பிரபல ரவுடியை போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்றனர்.

பிரபல ரவுடியான வல்லரசு, வடசென்னையை கலக்கி வரும் எண்ணூர் தனசேகரின் முக்கிய கூட்டாளி ஆவார். இவர் மீது சென்னை எம்.கே.பி. நகர் போலீஸ் நிலையத்தில் 2017-ம் ஆண்டு சுரேஷ்குமார் என்பவரை கொலை செய்த வழக்கு, வியாசர்பாடி போலீஸ் நிலையத்தில் 2 கொலை முயற்சி வழக்குகள், ஓட்டேரி போலீஸ் நிலையத்தில் வழிப்பறி வழக்கு, கொடுங்கையூர் போலீஸ் நிலையத்தில் அடிதடி வழக்கு உள்பட 8 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
வல்லரசுவின் கூட்டாளி பெரம்பூரை சேர்ந்த கதிர் என்கிற கதிரவன் (33). இவர் வல்லரசுடன் சேர்ந்து கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். இவர் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதேபோல் வல்லரசுவின் மற்றொரு கூட்டாளி பெரம்பூரை சேர்ந்த கார்த்திக் (23). இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வியாசர்பாடி பகுதியில் கத்தியுடன் சுற்றித்திரிந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது வியாசர்பாடி போலீஸ்காரர்கள் பவுன்ராஜ் (35), ரமேஷ் (32) ஆகியோர் அந்த பகுதியில் ரோந்து சென்றனர். இந்த நிலையில் நள்ளிரவு 12 மணி அளவில் ரவுடி வல்லரசு, போலீஸ்காரர் ரமேசிடம் வியாசர்பாடி கணேசபுரம் கார்டன் பகுதியில் ஒரு குற்றவாளியை பிடித்து வைத்துள்ளோம் என்று தகவல் தெரிவித்து உள்ளார்.
இதனை உண்மை என்று நம்பிய ரமேஷ், சக போலீஸ்காரர் பவுன்ராஜை அழைத்துக்கொண்டு கணேசபுரம் கார்டன் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது கதிர் 2 போலீஸ்காரர்களையும் வெட்டுடா என்று வல்லரசிடம் கூறினார். உடனே வல்லரசு கத்தியால் பவுன்ராஜின் தலையில் ஓங்கி வெட்டியதாக கூறப்படுகிறது.
அப்போது ரமேஷ் தப்பி ஓட முயன்றார். அவரை பிடித்து கத்தியால் திருப்பி வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் ஏற்பட்டு 2 போலீஸ்காரர்களும் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தனர். அங்கிருந்து வல்லரசு, கார்த்திக், கதிர் ஆகியோர் தப்பிச் சென்று விட்டனர்.
இந்த சம்பவம் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ரவுடிகளை பிடிக்க சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டார்.
அதன்பேரில் கூடுதல் கமிஷனர் தினகரன், இணை கமிஷனர் விஜயகுமாரி, புளியந்தோப்பு துணை கமிஷனர் சாய்சரண்தேசாய் ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் ஜார்ஜ் மில்லர், ரவி, ஜவகர்பீட்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரேம்குமார், தீபன், ஆதர்ஷ் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
ரவுடி வல்லரசு மாதவரம் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். மாதவரம் ‘டிரக் டெர்மினல்’ என்ற இடம் அருகே வல்லரசு பதுங்கி இருப்பதை போலீசார் உறுதி செய்தனர்.
அங்கு சென்று பார்த்தபோது அங்குள்ள ஒரு மைதானத்தில் வல்லரசு இருந்தார். அப்போது சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரேம்குமார், தீபன் ஆகியோர் அவரை பிடிக்கச்சென்றனர். குடிபோதையில் இருந்த வல்லரசு, கத்தியை திருப்பி 2 சப்-இன்ஸ்பெக்டர்களையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் சப்-இன்ஸ்பெக்டர்கள் 2 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே இன்ஸ்பெக்டர் ரவி, வல்லரசை சரண் அடையும்படி கூறினார். அதற்கு வல்லரசு, ’உங்களை கொல்லாமல் விட மாட்டேன்’ என கூச்சலிட்டார். உடனே இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் வல்லரசின் காலில் சுட்டார்.
உடனே வல்லரசு போலீசாரை நோக்கி ஓடி வந்தார். அதன்பின்னர் ஜார்ஜ் மில்லர் 2 முறை வல்லரசின் மார்பு பகுதியில் சுட்டதில் வல்லரசு கீழே சுருண்டு விழுந்தார். உடனே அவரை சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதற்கிடையே ரவுடி வல்லரசின் கூட்டாளிகள் சென்னை செம்பியம் பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே அங்கு போலீசார் விரைந்து சென்று, கதிர், கார்த்திக் ஆகியோரை கைது செய்தனர்.
ரவுடி என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் மாதவரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரிய ரவுடியாக ஆசைப்பட்டு துப்பாக்கி குண்டுக்கு பலியான வல்லரசு
ரவுடி வல்லரசின் தந்தை சாமிக்கண்ணு. இவரது சொந்த ஊர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம். சென்னை மாதவரம் சீதாபதி தெருவில் வசித்து வருகிறார். இவர் சென்னை கோயம்பேட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளி. இவரது இளைய மகன் தான் ரவுடி வல்லரசு. பிளஸ்-2 வரை படித்துள்ளார்.
இவருக்கு பாண்டியன், அருண்பாண்டியன் என 2 அண்ணன்களும், தனலட்சுமி என்கிற ஒரு அக்காளும் உள்ளனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வியாசர்பாடி பகுதியில் வசித்து வந்த வல்லரசு, மது, கஞ்சா போதைக்கு அடிமையானார். பருத்திவீரன் படத்தில் நடிகர் கார்த்தி பெரிய ரவுடியாகி பெரிய பெரிய ஜெயில்கள் எல்லாம் பார்க்க வேண்டும் என்று கூறுவார். அதேபோல பெரிய ரவுடியாக வல்லரசு ஆசைப்பட்டார்.
இந்த நிலையில் தான் வடசென்னையை கலக்கி வரும் பிரபல ரவுடி தனசேகரன் என்பவரிடம் கூட்டாளியாக சேர்ந்தார். அதில் இருந்து கொலை, கொள்ளை, வழிப்பறி, கட்டப்பஞ்சாயத்து போன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டார். கடந்த 2017-ம் ஆண்டு எம்.கே.பி.நகர் பகுதியில் சுரேஷ்குமார் என்பவரை கொலை செய்தார்.
தனக்கென ஒரு கூட்டத்தை சேர்த்துக்கொண்டு சென்னை பேசின்பிரிட்ஜ் பகுதியில் கொலைமுயற்சியில் ஈடுபட்டார். தானே களத்தில் இறங்காமல் ஆட்களை வைத்து திருட்டுகளிலும், பெரிய, பெரிய தொழில் அதிபர்களை மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்களிலும் வல்லரசு ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பிரபல ரவுடியாக ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டு கடைசியில் போலீசாரின் துப்பாக்கி குண்டுக்கு பலியானார்.
போலீஸ்காரர் தலையில் 20 தையல்கள்
ரவுடி வல்லரசு கத்தியால் போலீஸ்காரர் பவுன்ராஜை வெட்டியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதேபோல் போலீஸ்காரர் ரமேசுக்கும் காயம் ஏற்பட்டது. பவுன்ராஜ், ரமேஷ் ஆகியோர் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு சேர்க்கப்பட்டனர். அங்கு பவுன்ராஜுக்கு தலையில் 20 தையல்கள் போடப்பட்டது. பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ரமேஷ் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இதேபோல் வல்லரசு கத்தியால் தாக்கியதில் காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரேம்குமார், தீபன் ஆகியோரும் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
என்கவுண்ட்டரில் கைதேர்ந்த இன்ஸ்பெக்டர்கள்
ரவுடி வல்லரசுவை சுட்டுக்கொன்ற சம்பவத்தில் ஈடுபட்ட தனிப்படையில் உள்ள இன்ஸ்பெக்டர்களில் ரவி, ஜார்ஜ் மில்லர், ஜவகர் பீட்டர் ஆகிய 3 பேரும் சப்-இன்ஸ்பெக்டர்களாக இருந்தபோது என் கவுண்ட்டர்களில் கைதேர்ந்தவர்கள்.
இதில் ஜார்ஜ் மில்லர் மிலிட்டரி குமார் என்ற ரவுடியை சுட்டுக்கொன்றுள்ளார். ஜவகர் பீட்டர், பிரபல சந்தன கடத்தல் வீரப்பனை என்கவுண்ட்டர் செய்ததில் பிரபலமானவர்.
மனித உரிமை ஆணையத்தில் புகார் – ரவுடியின் அக்காள் பேட்டி
சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி வல்லரசின் அக்காள் தனலட்சுமி கூறுகையில், ‘எனது தம்பி வல்லரசு மீது ஒரு கொலை வழக்கு இருப்பது உண்மை தான். அது முதல் போலீஸ் அவனை நிம்மதியாக தூங்கவிடவில்லை. அடிக்கடி தேடி வந்து தொந்தரவு செய்து வந்தனர். இது போலி என்கவுண்ட்டர். இதுகுறித்து மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்ய உள்ளோம்’ என்று கூறினார்.