ரிஷாத், அசாத், ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக 21 முறைப்பாடுகள்

302 0

பதவி துறந்த முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகிய மூவருக்கும் எதிராக பொலிஸ் தலைமையகத்துக்கு 21 முறைப்பாடுகள் இன்று பிற்பகல் வரை கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 4 ஆம் திகதி முதல் இன்று மாலை நான்கு மணி வரை குறித்த மூவருக்கும் எதிராக முறைப்பாடுகளை பதிவு செய்ய பொலிஸ் தலைமையகத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் கீழ் இரு பொலிஸ் அத்தியட்சர்கள் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.

அந்த குழுவுக்கே இன்று பிற்பகல் 3.00 மணி வரை இந்த 21 முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றிருந்தன.

அத்துடன் இன்று மாலை 6.00 மணியாகும் போதும் மேலும் சில முறைப்பாடுகள் எழுதப்பட்டுக்கொண்டிருந்ததை பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர உறுதி செய்தார்.

இதவேளை இவர்கள் மூவருக்கும் எதிராக முறைப்பாடுகளை ஏற்க பொலிஸ் மா அதிபரினால் நியமிக்கப்பட்ட சிறப்புக் குழுவின் பனிகள் இன்றுடன் நிறைவடைந்துள்ளன.

இந் நிலையில் அவர்களால் பகுப்பாய்வு செய்யப்பட்டு பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகள் மேலதிக விசாரணைகளுக்காக சி.ஐ.டி. எனப்படும் குற்றப்புலனாய்வுப் பிரிவினிடம் ஒப்படைக்க நடவடிக்க‍ை எடுத்துள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.