பரபரப்பான சூழலில் அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம்; 4 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கவில்லை!

321 0

அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் அழைப்பு வராததால் பங்கேற்கவில்லை என 3 எம்.எல்.ஏ.க்கள் கலைச்செல்வன், ரத்தினசபாபதி, பிரபு விளக்கம் அளித்துள்ளனர்.

மதுரை வடக்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா கடந்த சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், அம்மாவால் அதிகம் அடையாளம் காட்டப்பட்டவர் தலைமை ஏற்க வேண்டும்.  அ.தி.மு.க.வுக்கு ஒரே தலைமை தேவை.  ஆளுமை திறனுடைய தலைவர் இல்லை.  கட்சியில் எல்லோருக்கும் நெருடல் இருக்கிறது. நெருடலை போக்க எல்லோரும் கருத்து தெரிவித்து உள்ளனர்.

ஒற்றை தலைமையில் கட்சியை கட்டுப்பாட்டுடன் கொண்டு செல்ல வேண்டும்.  2 தலைமை இருப்பதால் முடிவு எடுக்க முடியவில்லை. சுயநலமற்ற ஒருவரை தலைமைக்கு தேர்ந்து எடுக்க வேண்டும். முடிவெடுக்கும்  நிலையில் கட்சி தலைமை இருக்க வேண்டும். ஒரே தலைமையை உருவாக்குவது குறித்து அ.தி.மு.க. பொதுக்குழுவில் வலியுறுத்துவோம் என கூறினார்.
அவரது கருத்தை வரவேற்பதாக கூறியுள்ள கே.சி. பழனிசாமி, அ.தி.மு.க. பொதுச்செயலாளரை தேர்வு செய்ய பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என கூறினார்.  இதேபோன்று ராஜன் செல்லப்பாவின் பேச்சுக்கு குன்னம் தொகுதி எம்.எல்.ஏ ஆர்.டி. ராமச்சந்திரன் ஆதரவு தெரிவித்து பேசினார்.
இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் இன்று அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்க உள்ளனர்.  அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை பற்றி எம்.எல்.ஏ.க்கள் பேச தொடங்கியுள்ள நிலையில் கட்சியின் இந்த முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் ஆகியவற்றின் முடிவுகள், கட்சி தலைமை உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி விவாதிக்கப்படும்.  பொதுக்குழுவை கூட்டுவது பற்றியும் ஆலோசிக்கப்படுகிறது.  இக்கூட்டத்தில் குன்னம் எம்எல்ஏ ஆர்.டி.ராமச்சந்திரன் பங்கேற்கவில்லை.  உடல்நல குறைவால் குன்னம் தொகுதி எம்.எல்.ஏ ஆர்.டி. ராமச்சந்திரன் கேரளா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  இதனால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
இதேபோன்று கூட்டத்தில் பங்கேற்க 3 எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு இல்லை.  அழைப்பு வராததால் பங்கேற்கவில்லை என எம்.எல்.ஏ.க்கள் கலைச்செல்வன், ரத்தினசபாபதி, பிரபு  விளக்கம் அளித்துள்ளனர்.