மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை; மண்ணின் தரம் பற்றி நற்சான்றிதழ் வழங்கப்பட்டது!

282 0

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் மண்ணின் தரம் நன்றாக உள்ளது என சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்தபோது தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று கடந்த 2014ம் ஆண்டு பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதினார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்ற பிறகு கடந்த 2015ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ந்தேதி மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி அருண் ஜெட்லி தாக்கல் செய்தார்.
அப்போது எய்ம்ஸ் மருத்துவமனை ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், தமிழ்நாடு, இமாச்சல பிரதேசம், அசாம் ஆகிய மாநிலங்களில் தொடங்கப்படும் என்ற தகவலை அறிவித்தார்.
இந்தநிலையில் கடந்த ஆண்டு ஜூன் 18ந்தேதி டெல்லியில் இதுதொடர்பாக நடந்த கூட்டத்தில் தமிழகத்தில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட இருப்பதாக முடிவு செய்து, அதற்கான அறிவிப்பாணையை தமிழக அரசுக்கு, மத்திய அரசு அனுப்பியது. 3 ஆண்டுகளாக நீடித்த தமிழகத்தின் கோரிக்கைக்கு தீர்வு கிடைத்தது.
இதன்படி, இந்த மருத்துவமனை மதுரைக்கு அருகில் இருக்கும் தோப்பூர் என்ற இடத்தில் ரூ.1,500 கோடி மதிப்பில் 200 ஏக்கரில் அமைய இருக்கிறது. இதில் 750 படுக்கை வசதிகளுடன் கூடிய நவீன மருத்துவமனை, 100 எம்.பி.பி.எஸ். இடங்கள், 60 செவிலியர்கள் பயிற்சி பெறும் விதமாகவும், படிப்பதற்கான வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தில் மண்ணின் தரம் நன்றாக உள்ளது.  இதனால் 6 மாடிக்கு மேல் கட்டிடம் கட்டலாம் என சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.