யாழ்ப்பாணம் பலாலி படைத்தளம் பகுதிக்கு அண்மையாக கண்ணிவெடி வெடித்ததில் இராணுவச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இரண்டு சிப்பாய்கள் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றது.
“பலாலியில் படைத்தளம் அமைந்துள்ள பகுதியை அண்மித்த காணிகள் இராணுவத்தினரால் சிரமதானம் செய்யப்படுவது வழமை. அதேபோன்று இன்றும் சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது. இதன் போது கல் ஒன்றை இராணுவத்தினர் அகற்ற முற்றபட்ட போது, அந்தப் பகுதியில் கண்ணிவெடி ஒன்று வெடித்தது.
அதன்போது சிப்பாய் ஒருவர் இடுப்புக்கு கீழ் பகுதி முற்றாக சிதவடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இருவர் படுகாயமடைந்தனர் ” என்று தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் பலாலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.