எதிர்ப்பையும் மீறி யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு அகதிகள்!

385 0

வடக்கு மக்களின் எதிர்ப்பையும் மீறி இரண்டாம் கட்ட நடவடிக்கையாக யாழ்ப்பாணத்திலும் வெளிநாட்டு அகதிகள் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வெளிநாட்டு அகதிகள் இரகசியமான முறையில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள பிரதேசம் தொடர்பாக தகவல் ஏதும் வெளியிடப்படவில்லையெனவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

நீர்கொழும்பில் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சிரியா ஆகிய நாடுகளை சேர்ந்த அகதிகளே இவ்வாறு வடக்கிற்கு தற்போது அழைத்து வரப்பட்டு தங்கவைக்கப்படுகின்றனர்.

இதன் ஒரு கட்டமாக நேற்று முன்தினம் ஒருதொகை அகதிகள் வவுனியாவில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையிலேயே யாழ்ப்பாணத்திற்கும் வெளிநாட்டு அகதிகள் அழைத்து வரப்பட்டு இரகசியமான முறையில் வீடொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பதிவுகளை மேற்கொண்டதன் பின்னரே இவ்வாறு அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனை உறுதிப்படுத்தும் நோக்கில்  யாழ்.பொலிஸ் நிலையத்தினை தொடர்புகொண்டு வினவியது. இதன்போது அவர்கள் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எவையும் தெரியாதெனவும் இதனை தற்போது உறுதிப்படுத்த முடியாதுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.