பதுக்கி வைத்திருந்த மதுபானங்களுடன் இருவர் கைது

257 0

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் பதுக்கி வைத்திருந்த சுமார் ஒரு லட்சம் ரூபா பெறுமதியான சட்டவிரோத மதுபானங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றை தமது உடமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டனர் என்று சிறப்பு அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் பண்ணையில் அமைந்துள்ள வெளி மாகாணங்களுக்கான பேருந்து தரிப்பிடத்துக்கு முன்பாகவுள்ள கட்டடத்தில் இந்த மதுபானங்கள் நேற்று பிற்பகல் சிறப்பு அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டன.

வெசாக் பண்டிகையை முன்னிட்டு 04 நாள்களுக்கு மதுபான சாலைகள் பூட்டுவதற்கு மதுவரித் திணைக்களம் கட்டளையிட்டது.

இந்த நிலையில் சுமார் ஒரு லட்சம் ரூபா பெறுமதியான மதுபானப் போத்தல்கள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளன என்று கிடைத்த தகவலின் அடிப்படையில் பண்ணை பேருந்து நிலையத்துக்கு முன்பாக உள்ள கட்டடம் சிறப்பு அதிரடிப் படையினரால் முற்றுகையிடப்பட்டது.

அங்கு மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருந்த நிலையில் அவை மீட்கப்பட்டன. அதனை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் ஒருவர் யாழ்ப்பாணம் முலவைப் பகுதியைச் சேர்ந்தவர். மற்றொருவர் சாவகச்சேரியைச் சேர்ந்தவர்” என்று சிறப்பு அதிரடிப் படையினர் தெரிவித்தார்.