கொச்சிக்கடை அந்தோனியார் ஆலய தற்கொலைதாரி முவாத்தின் மரபணு – பெற்றோரின் மரபணுவும் ஒத்துள்ளது!

255 0

கடந்த 21 ஆம் திகதி உயிர்ப்பு ஞாயிறு தினத்தன்று கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் தற்கொலை தாக்குதல் மேற்கொண்ட அலாதீன் அஹமட் முவாத்தின் என்பவரின் மரபணுவும் அவரின் பெற்றோரின் மரபணுவும் ஒத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தற்கொலை குண்டுதாரி மரணம் தொடர்பான விசாரணைகள் நேற்றைய தினம் கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் நடைபெற்ற போது இந்த விடயங்கள் தெரியவந்தன.

சட்ட வைத்திய அதிகாரி, கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் அதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்தார்.

தற்கொலை குண்டுதாரியின் தலை தமது மகனுடையது என தாம் சட்ட வைத்திய அதிகாரியின் அலுவலகத்தில் அடையாளம் காட்டியதாகவும் அலாவுதீன் அஹமட் முவாத்தின் பெற்றோர் நீதவான் முன்னிலையில் நேற்று தெரிவித்துள்ளனர்.

கொழும்பு, மட்டக்குளி பகுதியை சேர்ந்த தற்கொலை குண்டுதாரியான அலாவுதீன் அஹமட் முவாத்தின் தந்தை தனது சாட்சியில், உயிரிழந்துள்ள 22 வயதான தனது மகன் சட்டம் குறித்த ஆரம்ப கல்வியை முடித்தவர் எனவும் சாய்ந்தமருது பகுதியை சேர்ந்த தனது உறவினர் ஒருவரின் மகளை திருமணம் செய்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.