ராஜீவ்காந்தியை கொச்சைப்படுத்துவதா? – பிரதமர் மோடிக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்

395 0

ராஜீவ்காந்தியை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியிருப்பது நாகரீகமற்ற செயலாகும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பிரதமராக பல சாதனைகள் புரிந்து இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் நிலை நிறுத்தியவர் ராஜீவ்காந்தி. இத்தகைய வரலாற்று சாதனைகள் புரிந்த ராஜீவ்காந்தியை கொச்சைப்படுத்தும் வகையில் பிரதமர் நரேந்திரமோடி பேசியிருப்பது நாகரீகமற்ற செயலாகும்.

மறைந்த தலைவரை 28 ஆண்டுகளுக்கு பிறகு இப்படி இழிவாக பேசியிருப்பது எத்தகைய அநாகரீகம் என்பதை கொஞ்சம் கூட கருதாமல் நாட்டின் பிரதமரே இவ்வாறு பேசியிருப்பது எவ்வளவு தரம் தாழ்ந்த செயல் என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.
பாராளுமன்ற தேர்தல் முடிந்து வருகிற 23-ந்தேதி தீர்ப்பு (தேர்தல் முடிவு) வெளிவரும்போது மீண்டும் பிரதமராக வர முடியாது என்கிற நிலையை அறிந்த மோடி சமீபகாலமாக பதற்றத்துடன் பேசி வருகிறார். அச்சத்தின் பிரதிபலிப்பு அவரது முகத்தில் தெரிகிறது. 5 ஆண்டு கால ஆட்சியின் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்க துணிவில்லாத மோடி, ராஜீவ்காந்தியை கொச்சைப்படுத்துவதை நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.