டுவிட்டர் தலைமை நிர்வாகியை அழைத்து டிரம்ப் பேச்சு

404 0

பின்தொடர்வோர் எண்ணிக்கை குறைந்ததால் டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சேவை, வெள்ளை மாளிகைக்கு வரவழைத்து டிரம்ப் சந்தித்து பேசினார்.

உலக அளவில் டுவிட்டரில் அதிக பின்தொடர்பவர்களை (பாலோயர்) வைத்திருக்கும் தலைவர்களில் முக்கியமானவர் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப். ஆனால் சமீபகாலமாக டுவிட்டரில் தன்னை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதாகவும், டுவிட்டர் நிறுவனம் தனக்கு எதிராக செயல்படுவதே இதற்கு காரணம் என்றும் அவர் குற்றம்சாட்டி வந்தார்.

மேலும், டுவிட்டர் நிறுவனம் பழமைவாதிகளுக்கு எதிரான போக்கை கையாண்டு வருவதாகவும், தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து ஏராளமானவர்களை நீக்கியதோடு, தனது ஆதரவாளர்கள் டுவிட்டரில் இணைவதற்கான வழிமுறைகளை கடினமாக்கிவிட்டதாகவும் டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். ஆனால் டிரம்பின் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் டுவிட்டர் நிறுவனம் மறுத்து வந்தது.

இந்த நிலையில், டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சேவை, வெள்ளை மாளிகைக்கு வரவழைத்து டிரம்ப் சந்தித்து பேசினார். அப்போது டிரம்ப், டுவிட்டரில் தன்னை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதற்கான காரணங்கள் குறித்து கேட்டறிந்தார். மேலும், அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் டுவிட்டரின் பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் வெள்ளை மாளிகை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.