குண்டுதாக்குதல் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த உலகநாடுகள் உதவவேண்டும்- ஐநா பாதுகாப்பு சபை

269 0

இலங்கையில் தேவாலயங்கள் ஐந்து நட்சத்திர விடுதிகள் வேறு மூன்று பகுதிகளில் இடம்பெற்ற கோழைத்தனமான கொடுரமான பயங்கரவாத தாக்குதல்களை ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையின் உறுப்பினர்கள்  மிகக்கடுமையான விதத்தில் கண்டித்துள்ளனர் என பாதுகாப்பு சபையின் தலைவர் கிறிஸ்டொப் ஹெகுஸ்கென் தெரிவித்துள்ளார்

குண்டுவெடிப்பினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தவர்களிற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் ஆழ்ந்த அனுதாபத்தையும் இரங்கலையும் பாதுகாப்பு சபையின் உறுப்பினர்கள் வெளியிட்டுள்ளனர்

பயங்கரவாதம் அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் சர்வதேச சமாதானம் மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது எனவும் பாதுகாப்பு சபையின் உறுப்பு நாடுகள் தெரிவித்துள்ளன.

கண்டிக்கப்பட வேண்டிய இந்த பயங்கரவாத தாக்குதல்களிற்கு காரணமானவர்கள் அதற்கு ஆதரவு வழங்கியவர்கள் நிதி மற்றும் அனுசரனை வழங்கிய அனைவரையும் நீதியின் முன் நிறுத்தப்படவேண்டியதன் அவசியத்தையும் பாதுகாப்பு சபை வலியுறுத்தியுள்ளது.

உலக நாடுகளை அவர்களிற்கு உள்ள கடப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு சபையின் தீர்மானங்களிற்கு ஏற்ப இலங்கைக்கும் இந்த விடயத்தில் தொடர்புள்ள அதிகாரிகளிற்கும் முழு ஒத்துழைப்பை வழங்குமாறும் ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபை கேட்டுக்கொண்டுள்ளது.